நாம் போகும் போது யாராவது வழியை மறித்து நின்றிருந்தாலே ‘இது என்ன உன் அப்பன் வீட்டு ரோடா’ வழி விடு என சொல்வதை கேட்டிருப்போம். ஆம், இது எங்க அப்பன் வீட்டு ரோடு தான், காசு கட்டினால் தான் வழிவிடுவோம் என தேசிய நெடுஞ்சாலை களின் ஒவ்வொரு நாற்பது கி.மீ தூரத்திற்கும் சுங்கச் சாவடிகளை அமைத்து ஏற்கனவே மக்களை “சாவடி”த்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, தற்போது கீழே தள்ளியதோடு குழியை யும் பறித்த கதையாக செப்டம்பர் 1 முதல் கட்டணங்களை கடுமையாக உயர்த்திவிட்டது. ‘எப்பவாவது ஒரு நாளைக்குத்தானே பயணம் போறோம், அதனால நம்மை அது ஒன்னும் பெருசா பாதிக்கலையே என பெரும் பாலான மக்கள் கடந்து போய்க் கொண்டிருப்ப தால் தானோ என்னவோ இத்தகைய கட்டணக் கொள்ளைக்கு பின்னால் ஒளிந்திருக் கும் பிரச்சனை பலருக்கும் புரிவதில்லை. எனவே, எளிதாகக் கடந்து போகும் பிரச்சனை யல்ல இது எனும் கோணத்திலிருந்து இப்பிரச்சனையை நாம் அணுக வேண்டியது அவசியமாகிறது. அரசாங்கத்தின் ஆதர வோடு நடைபெறும் பித்தலாட்டங்களில் ஒன்று தான் இந்த சுங்கக் கட்டண கொள்ளை என்பதை பின்வரும் விபரங்களின் மூலமாக நாம் உணர்ந்து கொள்ளலாம். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 53 சுங்கச் சாவடிகள் உள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 8.69 லட்சம் வாக னங்கள் சுங்கச் சாவடிகளை கடந்து பயணம் செய்கின்றன. அவர்களிடமிருந்து வசூலிக்கப் படும் கட்டணம் நாள் ஒன்றுக்கு 9.84 கோடி ரூபாய் ஆகும். அதாவது ஒரு மாதத்திற்கு 286 கோடி ரூபாய். தமிழகத்தில் அமைக்கப் பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க ஒவ்வொரு நாளும் சுமார் பத்துக் கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தி தான் மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு தமிழக நெடுஞ்சாலை களில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் வசூ லிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.3,817 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டு வசூலிக்கப்பட்ட தொகையான ரூ.2,695 கோடியுடன் ஒப்பிடும் போது 40 சதவீதம் அதிகமாகும். இந்நிலை யில் தான் இந்த ஆண்டும் வருகிற செப்டம்பர் 1 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. இதன் மூலம் வசூலிக்கப்படும் மொத்த தொகை ரூ.4,085 கோடியாக இருக்கும். அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வின் மூலம் ஒவ்வொரு மாதமும் தமிழக மக்களிடம் இனி கூடுதலாக ரூ.18 கோடி வசூலிக்கப்பட உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 250 சதவீதம் அளவிற்கு, அதாவது இரண்டரை மடங்கு அளவிற்கு சுங்கக் கட்டணம் அதிகரிக்கப் பட்டிருக்கிறது. அதாவது 2014இல் ஒருவர் ரூ.100/- கட்டினார் எனில் தற்போது அவர் ரூ.250/- கட்டினாலே பயணம் செய்ய முடியும் எனும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படும் கட்டண விகிதங்களுக்கான வரையறை என்ன, வசூ லிக்கப்படும் கட்டணங்கள் எவ்வளவு, நியாய மான அளவில் தான் கட்டணம் வசூலிக்கப் படுகிறதா எனும் எந்த கேள்விகளுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளிப்பதில்லை. கடந்த பல ஆண்டுகளாக இதே நிலைமை தான். வெளிப்படைத் தன்மையில்லாத பெரும் கொள்ளையாகத்தான் சுங்கக் கட்டண விவகாரம் நீடிக்கிறது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சா வடிகள் அனைத்தும் தனியார்- அரசு கூட்டு எனும் அடிப்படையிலேயே (Build, Operate, Transfer) அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் அதற்கு பிறகு கட்டணம் வசூலிக்கும் முறையை கைவிட்டு அரசிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விட வேண்டும். ஆனால் பல இடங்களில் சுங்கச் சாவடிகள் அனுமதிக்கப்பட்ட காலத்தை யும் மீறி வசூல் கொள்ளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தாங்கள் செய்த முத லீட்டை இன்னமும் முழுமையாக திரும்பப் பெறவில்லை; எனவே காலநீட்டிப்பு வேண்டும் என நீதிமன்றங்களின் மூலமாக தீர்ப்பையும் பெற்றிருக்கின்றன. இதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், ஒன்றிய அரசும் துணை போகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட நிலைமைகள் நீடிக்கும் நிலையில் தான் தற்போது ஒன்றிய அரசு தேசிய பணமாக்கல் கொள்கை என்ற பெயரால் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 26,700 கி.மீ நீளமுள்ள சாலைகளை ரூ. 1.6 லட்சம் கோடிக்கு தனி யாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்திருக் கிறது. ஆனால் உண்மையில் இந்த நெடுஞ் சாலைகளை அமைப்பதற்காக ஒன்றிய அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ.8 லட்சம் கோடியாகும். அதாவது நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் தனியாருக்கு நெடுஞ்சாலை களை அளிக்கும் அரசு, மக்களிடத்தில் 250 சதவீத அளவிற்கான சுங்கக் கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் என்பது, ஒவ்வொரு ஆண்டும் கடுமையான உயர்வு என்பதும் ஒன்றிய அரசாங்கத்தின் பகல் கொள்ளை நடவடிக்கையாகும். இத்த கைய கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்டால் ஆண்டி - இந்தியன் என தேசவிரோதி முத்திரை குத்துகிறார்கள். ஆம். அதானி – அம்பானி எனும் கார்ப்பரேட் இந்தியர்களின் கஜானாவை நிரப்புவதற்காக நம்மை ஓட்டாண்டியாக்குவதா என அரசை நோக்கி எதிர்க்கேள்வி எழுப்பினால் நாமெல்லாம் ஆண்டி-இந்தியர்கள் தானே!