tamilnadu

img

மதுரை பல்கலையில் வாலிபர் - மாணவர் சங்க தலையீட்டால் விநாயகர் சிலை அகற்றம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட விநாயகர் சிலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் எதிர்ப்பையடுத்து அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி  உள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நேற்று இரவோடு இரவாக உருவாக்கப்பட்டுள்ள பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இச்சம்பவம்  மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் பெரும்  பதற்றத்தினை உருவாக்கியது . இதையடுத்து  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாயர் கார்த்திக், மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிருந்தா ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில்

 

அரசு சார்ந்த எந்த நிறுவனத்திலும் மத, சாதிய அல்லது மக்களிடையே பிரிவினை உருவாக்கும் எந்த ஒரு அடையாளமும் இருக்கக்கூடாது என்பதே விதி . அதனையே நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 15 வது பிரிவு குறிப்பிடுகிறது.

இதனை மீறி அரசியல் சட்ட மாண்புகளையும் , பல்கலைக்கழக விதிகளையும் மீறி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரவோடு இரவாக ஒரு மதத்தின் சார்பான பிள்ளையார் சிலை வைத்து கோவில் கட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது நிர்வாகம் . இந்த கோவில் கட்டுவதற்கான ஒப்புதலும் அதற்கான ஏற்பாடுகளோ பல்கலைக்கழகத்தின் எந்த மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டன என்பதை நிர்வாகம் வெளியிட வேண்டும் .

கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் இதற்கு முன்பு எப்போதும் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்படாத விநாயகர் சதுர்த்தி நிகழ்வினை நடத்திட நிர்வாகம் தயாராகி வருவது மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயலாகும் .

உயர்நீதிமன்றமும் , தமிழக அரசும் பொது வெளியில் விழா கொண்டாடக்கூடாது என்கிற உத்தரவினை வெளியிட்டும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் வெளிப்படையாக அரசின் அறிவுறுத்தலையும் மீறி இப்படி செய்வது உயர்கல்வி மையத்திற்கான பண்பல்ல என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

எனவே மாவட்ட நிர்வாகமும் , தமிழக அரசாங்கமும் தீடீரென நிறுவப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அனைத்து தரப்பு மாணவர்களும் பயிலக்கூடிய கல்வி நிலைய வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும் . இதற்கு காரணமான பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை  அகற்றப்பட்டு அங்கு பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.