சுகாதாரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி, ஏப்.26- உலகப் புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளுக்கு வந்து தங்கியிருந்தனர். அவர்கள் சமைப்பதற்கும் குடிப்பதற்கும் மாநகராட்சி குடிநீரையே நம்பி உள்ளனர். இந்நிலையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 1-க்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்றும், நெல்சன் ரோடு பகுதியில் சனிக்கிழமை அன்றும் மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் மிகவும் கலங்கலாக தூசுகளுடன் வந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், உறையூரில் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் போராடி வந்த நிலையில், திருவானைக்காவல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் கலங்கலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரி கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.