தியாகி களப்பால் குப்புசாமி நினைவு கல்வி அறக்கட்டளை வழங்கியது
மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள்
மன்னார்குடி, ஏப்.29- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் வட்டம் களப்பால் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தியாகி களப்பால் குப்புசாமி நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பாக, சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுககள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி களப்பாலில் நடைபெற்றது. தியாகி களப்பால் குப்புவின் புதல்வர் ஏ.கே. கணேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ், மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால், விவசாயிகள் சங்கப் பொருளாளர் ஜி. மாரிமுத்து, திமுகவின் கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஆர். தேவதாஸ், வடக்கு ஒன்றியச் செயலாளர் பாலஞானவேல், கோட்டூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வி. ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் நிறுவன தலைவர், சென்னை வழக்குரைஞர் சி. பாலச்சந்திரன் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் மற்றும் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகளை வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் சிறப்புரையாற்றினார். தியாகி களப்பால் குப்புவின் மற்றொரு புதல்வர் ஏ.கே. சிவஞானம் நன்றி கூறினார்.