tamilnadu

img

விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.22-  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடி பகுதியில் காலம் காலமாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு, குத்தகை வாரச் சட்டத்தின்படி, உழவடைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, லெம்பலக்குடி பகுதியைச் சேர்ந்த கொத்தமுத்துப்பட்டி, நகர்த்துப்பட்டி, மேரிநகர், கம்பத்தான்பட்டி, வலையன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், காலம் காலமாக தங்கள் கிராமங்களில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்கள் சில தனிநபர்கள் பெயரில் இருந்து வருகிறது.  மேற்படி நிலத்தை சிலர் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி பிளாட் போட்டு விற்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதோடு, தமிழக அரசின் குத்தகை வாரச் சட்டத்தின்படி உழவடைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.வீரமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.முகமதலி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், தலைவர் எஸ். பொன்னுச்சாமி, துணைச் செயலாளர் த.அன்பழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஜீவானந்தம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் ஜெ.வைகைராணி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.