tamilnadu

கோவை இரட்டை ஆணவக் கொலை வழக்கு குற்றவாளிக்கு மரணத் தண்டனை விதிக்க வாய்ப்பு

கோவை, ஜன.23- கோவையில் 2019 ஆம் ஆண்டு நடந்த இரட்டை ஆணவக் கொலை வழக்கில் காதலனின் அண்ணனை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மரண தண்டனை வரை கொடுக்கும் அள வுக்கு குற்றம் இருப்பதாகதெரிவித்துள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர்களது மகன்கள் வினோத்குமார் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). இவர்கள் 3 பேரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்.  கடந்த 2019 ஆம் ஆண்டு கனகராஜ் அதே பகுதியில் வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள அமுதாவின் மகள் வர்ஷினி பிரியா  என்பவரை காதலித்து வந்தார். இவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   இவர்களின் காதலை கனகராஜின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக கனகராஜின் அண்ணன் வினோத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று மாலை வினோத்குமார் தனது தம்பி கனகராஜ் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு காதலி வர்ஷினி பிரியாவும் இருந்தார். அப்போது அண்ணன் - தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் தான் கொண்டு வந்த  அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். அதை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்தக் காயம் அடைந்த வர்ஷினி பிரியா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் வாலிபரை அவரது அண்ணனே ஆணவக்  கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அப்போதைய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், மேட்டுப் பாளையம் காவல்துறையினர்  கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். வினோத் குமார் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தாமாக சரணடைந்தார். இந்த ஆணவக் கொலைக்கு உதவியதாக வினோத்தின் நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புப் பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வியாழனன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பளித்தார்.இவர் மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு அந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்று நீதிபதி தெரிவித்தார்.  வருகின்ற 29 ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆணவ கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் குற்றவாளிகள் என அரசு தரப்பில் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.