tamilnadu

img

கீழடி அகழாய்வின் அறிக்கை - ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் அறிக்கையை உடனடியாக வெளியிடக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரையில் ஒன்றிய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் 4 முதல் 9வது கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு. இதில் கீழடியில் பழமையான நகர நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், ஒன்றிய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த 982 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிடக் கோரி மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு, இது தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.