இபிஎப் ஓய்வூதியம் ரூ.9000 வழங்கக் கோரி
கும்பகோணத்தில் ஓய்வூதியர்கள் மறியல்
வருங்கால வைப்பு நிதியை பாதுகாக்கவும் மாதாந்திர இபிஎப் ஓய்வூதியம் ரூ.9000 வழங்கிடவும், பஞ்சப்படி, மருத்துவ காப்பீடு அமலாக்கிட வலியுறுத்தி தஞ்சை மாவட்டக் கூட்டுறவு இபிஎப் ஓய்வூதியம் பெறுவோர் நல சங்கம் சார்பில், கும்பகோணம் இபிஎப் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் கே.பி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமச்சந்திரன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுப்பையன் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மறியல் போராட்டத்தை விளக்கி சங்கத்தின் தலைவர் சேகர், செயலாளர் வாசுதேவன் துணைச் செயலாளர் சொக்கலிங்கம், துணைத் தலைவர் சிவலிங்கம் ஆகியோர் விளக்கிப் பேசினார். போராட்டத்தில் அரசு துறை ஓய்வூதியர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர். ராஜகோபாலன், மாவட்ட துணைத் தலைவர் பழ. அன்புமணி, வட்டச் செயலாளர் உதயகுமார், ஜிஐசி ஓய்வூதியர் சங்கப் பொறுப்பாளர் ஜவஹர்லால் ஆகியோர் வாழ்த்தி பேசினர் மறியல் போராட்டத்தில் இபிஎப் 95 ஆம் ஆண்டு பென்சனர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷனாக ஒன்பதாயிரம் ரூபாய் பஞ்சப்படியுடன் வழங்கி இ.எஸ்.ஐ. திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 2014 செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு பின்பு என்ற பாகுபாடு இல்லாமல் தகுதி உள்ள அனைவருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முழு சம்பளத்திற்கான பென்ஷனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஓய்வூதியர்களை, காவர்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மதுக்கடையில் முதல்வர் படம்: அத்துமீறிய பாஜகவினர் கைது
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையில் முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் மதுபான விற்பனையில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் பாஜக மகளிரணி மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் தமிழக முதல்வர் படத்தை புதன்கிழமை மாலை ஒட்ட முயன்றனர். இதுதொடர்பாக, 3 பேரை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து, மருத்துவக் கல்லூரி முதலாவது நுழைவு வாயில் அருகே, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் தலைமையில் பொதுச் செயலர் ஆர். முரளிதரன், செயலர் சாய் லட்சுமி உள்பட பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல, ரயிலடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுபானக் கடையில் முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.