tamilnadu

img

“வேண்டாத வேலை என்றவர்கள் வாய் பிளக்கிறார்கள்”

காஞ்சிபுரம், செப்.5 - பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. பேட்மிண்டன் பிரிவில் காஞ்சிபுரம் வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மகளிருக்கான எஸ்யு5 பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸ் உடன் பலப்பரீட்சை மேற்கொண்டார் துளசிமதி முருகேசன். இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் துளசிமதி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்கு 8-வது பதக்கத்தை உறுதி செய்தார். ஞாயிறன்று (செப்.1) எஸ்யு 5 பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவை எதிர்கொண்டார் துளசிமதி. இதில் 21-17, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் யாங் வெற்றி பெற்றார். இதன் மூலம் துளசிமதிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. துளசிமதியின் கடின உழைப்பு மற்றும் விளையாட்டுத் துறையின் ஒத்துழைப்பே தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை கொள்ள வைத்தது என பெற்றோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் - பழைய ரயில்வே சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் வசிக்கும் முருகேசன் மகள் துளசிமதி (24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். இடது கை பாதிக்கப்பட்ட துளசிமதி பேட்மிண்டனில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தை முருகேசன் மகளுக்கு பேட்மிண்டன் ஆர்வம் இருப்பதை அறிந்து அதில் பயிற்சி அளித்தார். பள்ளி படிப்பு முடியும் வரை அவரே மகளுக்கு பயிற்சியாளராக இருந்தார். பின்னர் சிறப்பு பயிற்சி தேவைப்பட்டதால் ஹைதராபாத்தில் பேட்மிண்டன் விளையாட்டில் முறையான பயிற்சி பெற்றார் துளசிமதி. அங்கு தமிழரான முகமது இர்பான் தான் இவருக்கு பயிற்சி அளித்துள்ளார். துளசிமதி ஏற்கெனவே பல்வேறு ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் காங்சூ பகுதியில் நடந்த ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றார்.

பதக்கங்களை குவித்தவர்

இரட்டையர் விளையாட்டுப் போட்டி, ஒற்றையர் விளையாட்டு போட்டி என பேட்மிண்டனில் 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார். இம்முறை துளசிமதி பாரீஸில் நடைபெறும் பாராஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார். இவர் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது குறித்து துளசிமதியின் தந்தை முருகேசன் கூறுகையில் “துளசிமதி சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவருக்கு நானே பயிற்சி அளித்தேன். பலர் இது வேண்டாத வேலை என்றே எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி அவருக்கு பயிற்சி அளித்தேன். பல்வேறு இடையூறுகளை தாண்டியே அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தோம். அவரை இந்த இடத்துக்கு வர விடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். நாங்கள் சாதாரண கூரை வீட்டில்தான் வசித்தோம். துளசிமதி இந்த நிலைக்கு வர கடுமையாக பயிற்சியே காரணம்  என்றார். நிச்சயம் தங்கம் வெல்வேன்  பாராஒலிம்பிக் வெற்றி குறித்து துளசிமதி கூறுகையில், “இந்தப் போட்டியில் சீனாவின் யாங்கை வீழ்த்தி தங்கம் வெல்வது இலக்காக இருந்தது. இந்த முறை அது முடியாமல் போய்விட்டாலும் அடுத்த பாராஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். பாராஒலிம்பிக் மட்டுமல்ல, தொடர்ந்து நடைபெறும் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பதே எனது லட்சியம்” என்றார்.

சிபிஎம் பாராட்டு

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் விடுத்துள்ள அறிக்கையில், தங்கம் வெல்லவேண்டும் என்ற முனைப்போடு விளையாடிய துளசிமதி சீன வீராங்கனையிடம் 21-17, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும் அடுத்த போட்டியில் அவர் தங்கம் வெல்லுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.  துளசிமதிக்கு பயிற்சி அளித்து விளையாட்டில் அவரை ஊக்குவித்த அவரது தந்தை முருகேசனையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.  வேண்டாத வேலை என்று கூறியவர்கள் இன்று துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றதை அறிந்து வாய் பிளந்து நிற்கிறார்கள்.  - கார்த்திக் லிங்கநாதன்