விழுப்புரம், அக்.3- விழுப்புரம் ஆனங்கூர் ஊராட்சி தலைவர், தன்னை அவமதிக்கும் துணைத் தலைவரை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆனங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருளர் இனத்தை சேர்ந்த சங்கீதா செயல்பட்டு வருகிறார். இவரை பணி செய்ய விடாமலும், நாற்காலியில் அமர விடாமல் தடுத்து சாதிய வன்கொடுமை செய்து வரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் குணசேகரன் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் காசோலை அதிகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதனன்று ஊராட்சி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து விழுப்புரம் மாவட்ட பெரு ந்திட்ட வளாகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா கொடுத்த புகார் மனுவில் நான் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவள், எனது கணவர் ஏழுமலை இறந்து 20 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில் ஆனங்கூர் ஊராட்சி மன்ற பெண் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமத்தின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பல முற்போக்கான செயல்பாடுகளை செய்து வருகிறேன். நடந்து முடிந்த 2021 உள்ளாட்சி தேர்த லில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாட்களி லிருந்து இந்நாள் வரை ஊராட்சி மன்ற துணைத் தலைவரான சித்ரா அவரது கணவர் குணசேகர், வார்டு உறுப்பினர் சுதா அவரது கணவர் சரவணன் ஆகிய 4 பேரும் என்னை தலைவர் நாற்காலியில் அமர விடாம லும் பணி செய்ய விடாமலும் தொடர்ந்து சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி வருகின்றனர், நீ, இருளச்சி தலைவர் நாற் காலியில் அமர்ந்தால் ஊரே தீட்டாகிவிடும் என்று கேவலமாக பேசியும் வருகின்றனர், மீறி நாற்காலியில் அமர்ந்தால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டலும் கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி அடிப் படை வசதிகளான குடிநீர் மின்சாரம் சாலை மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் விடுவிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் டிஜிட்டல் கீ தர மறுத்தும் ஊராட்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக செயல்பட்டு வருகிறார் கள். இதனால் ஊராட்சிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்ய முடியாம லும் நிர்வாகத்தை சரிவர நடத்த முடியாம லும் உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த 28.8.2024 அன்று காலை சுமார் 11:30 மணி அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பணி செய்து வரும் இடத்தை நான் ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா,
அவரது கணவர் குணசேகரன் வார்டு உறுப்பினர் சுதா ஆகியோர் 100 நாள் வேலை செய்யும் இடமான ஏரி பகுதிக்கு வந்து மேற்படி அனைவரும் சேர்ந்து உன்னை யார் இங்கு வரச் சொன்னது உனக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது. இருளச்சி உனக்கு எங்களை வேலை வாங்கும் அளவிற்கு துணிச் சல் வந்து விட்டதா என்று நான் சார்ந்த சாதியை இழிவுபடுத்தும் விதமாக தகாத வார்த்தைகளால் திட்டி இனிமேல் நீ இந்த இடத்துக்கு வந்தால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இதுகுறித்து வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் என துறை சார்ந்த அனைத்து அரசு அதிகாரிகளிடமும் புகார் மனு கொடுத்தும், இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் இது சம்பந்தமாக செஞ்சி காவல் நிலையத்தில் கடந்த 1.9.2024 அன்று புகார் அளித்தேன். 24 நாட்களுக்கு மேலாகியும் இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் செஞ்சி காவல் துறையினர் எதிர் தரப்பினரி டம் ஒரு புகார் மனுவை வாங்கிக் கொண்டு நான் கொடுத்த புகார் மனுவை திரும்பப் பெறவில்லை என்றால் என் மீது வழக்கு பதிவு செய்து விடுவோம் என காவல்துறையினர் மிரட்டுகின்றனர். எனவே அரசு பழங்குடி இருளர் சமுதாயத்தை சார்ந்த எனக்கு முழு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்திட வேண்டும் எனவும், என்னை சாதி வெறி தாக்குதலுக்கு உட்படுத்திய அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். உடனடி யாக அங்கு விரைந்து வந்த காவல்துறையி னர், அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விழுப்புரம் தாலுகா காவல் நிலை யம் அழைத்து சென்றனர்.