மதுரை:
மதுரை மக்களவை உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2019-2020 ஆண்டில் மட்டும் 40 நபர்களுக்கு ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவ நிவாரண நிதியாக கிடைத்துள்ளது.
இது குறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த நிதியாண்டில் (2019-2020) பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி கோரி மக்களிடமிருந்து 74 மனுக்கள் பெறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில்ல் 40 நபர்களுக்கு ரூ.1,02,50,000 (ஒரு கோடியே இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) மருத்துவ நிவாரணத் உதவித்தொகையாக இதுவரை கிடைத்துள்ளது. இன்னும் 34 நபர்களுக்கு நிவாரண நிதி வரவேண்டியுள்ளது.இதுவரை பல்வேறு புற்று நோய்களால் பாதிக்கப்பட்ட 36 நபர்களுக்கு 97,75,000 ரூபாயும், இதய அறுவை சிகிச்சை தொடர்பாக நான்கு நபர்களுக்கு ரூ.4,75,000 நிவாரண நிதியாகவும் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.