ஏராளமான நுண்ணுயிரிகள், உயிர் சத்துகள், தனிமங்கள், வாயுக்கள் உள்ள ஒரு பிரம்மாண்ட சூழல் மண்டலமே மண். சிறியதும் பெரியதுமான பல கோடி உயிர்ப்பொருட்களின் தாய்வீடான மண் இல்லையென்றால் உயிர் இல்லை. பூமியில் வாழும் உயிரினங்களின் ஆதாரம் மண். மண்ணுக்காக ஒரு உலக தினம் என்ற எண்ணம் முதல்முதலில் 2002ல் ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 5 2014ல் ஐநாவின் தலைமையில் உலகின் முதல் மண் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. உணவு உற்பத்தி, உயிர்ப் பன்மயத்தன்மை போன்ற பல்வேறு செயல்களில் மண் முக்கியப்பங்கு வகிக்கிறது. மாசுபடுதல் போன்ற மனிதச் செயல்களால் மண்ணின் வளம் அழிக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகள்
ஒரு செண்டிமீட்டர் அளவு புது மண் உண்டாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி கொதித்து உருகும் கோளாக இருந்தது. காலப்போக்கில் இது குளிர ஆரம்பித்தபோது பாறைகளுக்கு இயற்பியல் வேதியியல் மாற்றங்கள் உண்டாயின. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக பனியும் மழையும் காற்றும் வெய்யிலும் மாறி மாறி ஏற்பட்டு இறுகிய பாறைகளுக்கு இடையில் தாவரங்கள் வளரத் தொடங்கின. இத்தகைய உயிர் அம்சங்கள் சேர்ந்தே மண் உருவாகியது. பாறைகள் உருவாகும் செயல்முறை பெட்ரோஜெனசிஸ் (petrogenesis) என்று அழைக்கப்படுகிறது. தட்டுகளாகவே மண் உருவாகிறது. இது ஒரிசோன் (orizone) என்று அழைக்கப்படுகிறது. வளம் மிக்க மண் 28%, பாலைவனப்பகுதியில் வளமற்ற மண்ணாக 23%, மணல் 22%, நீர் தேங்கியிருக்கும் பகுதியாக 10% மற்றும் பனிப்பாறைகளாக 6% என்ற அளவில் பூமியில் மண் காணப்படுகிறது. மீதமிருக்கும் 11% மண் மட்டுமே விவசாயம் செய்யத் தகுதியாக உள்ளது. வளம் மிக்க மண்ணில் 45% தாதுக்களும் 5% உயிர்ப்பொருட்களும் 25% வாயுவும் 25% நீரும் இருக்க வேண்டும். 50% பூஞ்சைகள், 20% பாக்டீரியாக்கள், இதே அளவிற்கு பொரோட்டோசோவாக்கள், 10% மண் புழுக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் அடங்கியதே ஆரோக்கியமான மண் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டேர் நல்ல மண்ணில் ஐந்து டன் அளவிற்கு எடையுடைய விலங்குகளும் அரை டன் அளவு நுண்ணுயிரிகளும் ஐந்து டன் மண் புழுக்கள் காணப்படும். காட்டில் தூய்மையானஒரு சதுர மீட்டர் மண்ணில் 12 கோடி உருளைப்புழுக்கள் வகையைச் சேர்ந்த உயிரினங்கள் (Nematodes) காணப்படுகின்றன.
நீர் சேமிப்பு
தன் பரப்பை போல மூன்று மடங்கு நீரை சேமித்துவைக்கும் பண்பு மண்ணிற்கு உள்ளது. மேற்பரப்பில் இருந்து 10 முதல் 15 செண்டிமீட்டர் வரை உள்ள மேல் மண்ணில்தான் பூமியில் இருக்கும் எல்லா தாவரங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் வளர்ச்சிக்கு அவசியமான சத்துகள் அடங்கியுள்ளன. மேல் மண்ணே உயிர்ப்போர்வை. வாயு மண்டலத்தில் அதிகமாக உள்ள கார்பனை உறிஞ்சி எடுக்க மண்ணால் முடியும். தாவரங்களை விட ஆறு மடங்கு கார்பனை உறிஞ்சும் ஆற்றல் மண்ணுக்கு உண்டு. உயிரினங்களுக்கு அவசியம் இல்லாததை எல்லாம் தான் உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவற்றிற்கு தேவையானதை வழங்கும் அபூர்வ சக்தி மண்ணுக்கு மட்டுமே உள்ளது. வெறும் மண் என்று அலட்சியமாக அதை நினைப்பது பெரும் தவறு.
அச்சுறுத்தல்கள்
பரப்பளவு குறைவதால் மண் மாசுபடுகிறது. மக்கிப் போகாமல் ஆயிரம் கோடி டன் திடக்கழிவுகள் ஆண்டுதோறும் மனிதர்களால் வீசியெறியப்படுகிறது. விவசாயிகள் பெருமளவில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் மண்ணை நஞ்சாக்கி மலடாக்குகிறது. மண் அரிப்பு மண்ணின் வலிமையை குறைக்கிறது. இது வேளாண் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை குறைக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய 600 கோடி டன் மேல் மண் அடித்துச்செல்லப்படுதல் மற்றும் தூசுக்காற்றுகளால் இழக்கப்படுகிறது. ஒரு பிளாஸ்டிக் துண்டு மண்ணில் விழும்போது ஒரு கோடி உயிரினங்கள் இல்லாமல் போகிறது. மண்ணை பாதுகாக்க அதிகபட்ச நீர் பூமியில் விழ அனுமதிக்கவேண்டும். உயிர்க்கழிவுகள் மண்ணில் குவியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மரங்களை நட்டு வளர்க்கவேண்டும். இயற்கை வழி வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே வருங்காலத்தில் நாம் காலூன்ற மண் என்ற மகத்தான பொருள் இருக்கும்.