சென்னை,நவ.12- சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க தமிழக வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; பதிவுத்துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.10,511 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டில் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.11,733 கோடி. கடந்த நிதி ஆண்டில் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.1,222 கோடி வருவாய் ஈட்டப் பட்டுள்ளது. ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான வருகிற நவம்பர் 14 (வியாழன்) மற்றும் 15 (வெள்ளி) ஆகிய தினங்களில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங் களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.