புதுதில்லி, ஜன.17- கோவிட் பெருந்தொற்று பரவத்தொடங்கிய 2020 ஏப்ரல் 1 முதல், நாட்டில் 1,47,492 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் பால் ஸ்வராஜ் போர்ட்டலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஜனவரி 11ஆம் தேதி வரை 10,094 குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி உள்ளனர். 1,36,910 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர், 488 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர். இதில் 76,508 சிறுவர்களும், 70,980 சிறுமிகளும், நான்கு மூன்றாம் பாலினத்தோரும் உள்ளனர். எட்டு முதல் 13 வயதுக்குட்பட்ட 59,010 குழந்தைகளும், 14 முதல் 15 வயதுக்குட்பட்ட 22,763 குழந்தைகளும், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட 22,626 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு முதல் ஏழு வயதுக்குட்பட்ட 26,080 குழந்தைகளும் உள்ளனர். மிக அதிகபட்சமாக ஒடிசாவில் 24,405 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 19,623, குஜராத் 14,770, தமிழ்நாடு 11,014, உத்தரப் பிரதேசம் 9,247, ஆந்திரப் பிரதேசம் 8,760, மத்தியப் பிரதேசம் 7,340, மேற்கு வங்கம் 6,835, தில்லி 6,629, ராஜஸ்தான் 6,827 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். 2021 ஆகஸ்ட் நிலவரப்படி, கேரளாவில் 87 குழந்தைகள் கோவிட் நோயால் பெற்றோரை இழந்துள்ளனர்.