tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சீமை கருவேல மரத்தை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

பாபநாசம், மே 9-  அய்யம்பேட்டை ரயில்வே கேட் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சீமை கருவேல மரத்தை அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறும் போது, அய்யம்பேட்டை ரயில்வே கேட்டை தாண்டி சாலை செல்கிறது. இந்தச் சாலை வழியே செருமாக்கநல்லூர், வடக்கு மாங்குடி, அகரமாங்குடி, காவலூர், பெருமாக்க நல்லூர், மெலட்டூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லலாம். இந்தச் சாலையில் அரசு நகரப் பேருந்து, கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில்  செருமாக்கநல்லூர் பேருந்து நிழற்குடை அருகில் சாலையோரமுள்ள சீமை கருவேல மரம் அடர்ந்து சாலையின் பாதிவரை பரவி, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்து நேரும் அபாயமுள்ளதால், சீமை கருவேல மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விபத்தில் மூதாட்டி பலி

துக்கோட்டை, மே 9-  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே குளத்தூரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி(75). இவர் வியாழக்கிழமை மாலையில், வீட்டின் அருகே உள்ள உணவகத்தில் சிற்றுண்டி வாங்கிக்கொண்டு திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் பாப்பாத்தி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார். கீரனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

கட்டட  கட்டுமான பணிகள்  துவக்க விழா 

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 9-  ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி(வார்டு 2) மதிப்பீடு 19 லட்சம் மற்றும் கம்மாபட்டி(வார்டு 23) ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் “ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்க்கான கட்டிடம் கட்டுமான பணிகளை நகர்மன்ற_தலைவர்_தங்கம்_ரவிக்கண்ணன்  துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி அவர்கள் நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி அவர்கள் நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் அவர்கள் நகராட்சி துணைப் பொறியாளர் நாகராஜன் அவர்கள் நகராட்சி சுகாதார அலுவலர் கந்தசாமி அவர்கள் அரசு ஒப்பந்ததாரர்கள் ஸ்ரீகுமரன் ஜீவா நோபிள் உடன் இருந்தனர்‌.

குளத்தில் மூழ்கி  2 சிறுமிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை, மே 9-  புதுக்கோட்டை அருகே, வியாழனன்று குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பால்பண்ணை அருகே, வெங்கப்பர் குளம் உள்ளது. இக்குளத்தில் அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த காஜா மைதீன் என்பவரது மனைவி ரம்ஜான் பேகம், தனது மகள் சபீரா(7) மற்றும் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சௌபியா(12) ஆகியோருடன் குளிக்கச் சென்றார். அப்போது ஆழம் தெரியாமல் இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கி உள்ளனர். இதனைப் பார்த்த ரம்ஜான் பேகம் சிறுமிகளை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சிறுமிகள் இருவரையும் சடலமாக மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில்  நடைபெறும் பேரணிக்கு  ஜவாஹிருல்லா வரவேற்பு 

பாபநாசம், மே 9-  மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் பேரணி நடைபெற உள்ளதை வரவேற்கிறேன். இந்திய ராணுவத்தின் வீரத்தை, தியாகத்தை, அர்ப்பணிப்பை போற்றவும், தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் பேரணி அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேரணிக்கு மனித நேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதுடன், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பெருந் திரளாக இதில் பங்கேற்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.