சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு முழுவதும் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலகங்களில் புதிதாக விண்ணப்பித்து ஒன்றரை வருடமாக மாநிலம் முழுவதும் காத்திருக்கும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காத்திருப்போர் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட உயரதிகாரிகள் முயற்சிப்பதை தடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களின் ரேசன் அட்டைகளை ஏற்கனவே உள்ள உத்தரவுகள் படி 35 கிலோ உணவு தானியத்திற்கான அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைகளாக மாற்றித்தர வேண்டும். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய சட்ட விதிகளின்படி வேலை முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழ்நாடு நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 16 அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
தள்ளு முள்ளு-பேச்சுவார்த்தை
மாநிலம் முழுவதும் எழுச்சியாக நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 700 பேர் பங்கேற்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த தாமதப்படுத்தியதை அடுத்து தடுப்பைத் தகர்த்து முன்னேறினர். அப்போது, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு நடைபெற்றது. பின்னர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. சென்னை ஆட்சியர் வாக்குறுதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் நேரில் இறங்கி வந்து கோரிக்கைகளைக் கேட்டு தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 800 பேர் பங்கேற்றனர். மதுரையில் மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 700 பேர் பங்கேற்றனர். திருவண்ணாமலையில் மாநில துணைச் செயலாளர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1,800 பேர் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தில் மாநில துணைத் தலைவர் பா.சு. பாரதி அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையில் பி. ஜீவா தலைமையில் நடைபெற்றப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சேலம், நாமக்கல், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்போராட்டம் ஆவேசமாக நடைபெற்றது. முதல்வர் தலையிடக் கோரிக்கை மாற்றுத்திறனாளிகளின் இப்பிரச்சனையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று மாநிலத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.