கீழப்பூவாணம் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை எம்எல்ஏ திறந்து வைத்தார்
தஞ்சாவூர், ஜுன் 20- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கீழப்பூவாணம் கிராமத்தில் பொதுமக்கள் கோரிக்கையையேற்று பகுதி நேர அங்காடியை சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் துவக்கி வைத்தார். கீழப்பூவாணம் கிராமத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு, சுமார் 2 கி.மீட்டர் தூரம் சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்காடி கட்டடம் கட்டி அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், அங்காடி செயல்படுவது தாமதமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராமப் பொதுமக்கள், அங்காடியை திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், தீவிர முயற்சி மேற்கொண்டு, அங்காடியை திறக்கத் தேவையான ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தளவாடப் பொருட்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கி, வெள்ளிக்கிழமை, பகுதி நேர நியாய விலைக்கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தர்மராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் (சேதுபாவாசத்திரம்) கணேசன், திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி. முத்துமாணிக்கம் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.