நாகர்கோவில், நவ.21- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் முதல் நாளில் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நவ.21 வியாழனன்று திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துறை செயலாளர் டாக்டர்.செல்வராஜ், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 2000 ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10 மீட்டர் கொண்ட Bowstring Arch Bridge (பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் பாலம்) ஆகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் படகு மூலம் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது. இந்நடைபாலம் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் எளிதாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது. இதனால் கடலின் அழகினை சுற்றுலா பயணிகள் நடந்தவாறே கண்டு ரசித்து மகிழலாம். மேலும் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்டத்தின் வருவாய் வளர்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2025 ஜனவரி முதல் நாளன்று பாலம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். நடைபெற்ற ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்). ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ் ராஜன், கண்காணிப்பு செயற்பொறியாளர் (திருநெல்வேலி) சராதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி (கன்னியாகுமரி), சண்முகநாதன் (திருநெல்வேலி), நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெரால்டு ஆண்டனி (நாகர்கோவில்), விஜயா (தக்கலை), வெனிஸ் (தோவாளை), பிரவீன் குமார் (குழித்துறை), உதவி செயற்பொறியாளர்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சந்திரசேகரன், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.