tamilnadu

img

மினி உலகக்கோப்பை கிரிக்கெட் - 2025

காயத்துடன் பந்துவீசிய ஷமி

9ஆவது சீசன் மினி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று துபாயில் நடைபெற்றது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. 7 ஓவரை வீசும் போது இந்திய வீரர் ஷமிக்கு நியூஸிலாந்து வீரர் ரச்சின் அடித்த பந்து மூலம் (6.3 ஓவரில்) இடது கையில் காயம் ஏற்பட்டது. சிறிது  நேர சிகிச்சைக்குப் பின்னர் ஷமி மீண்டும் பந்துவீசினார்.

10-30-1 ஜடேஜா மிரட்டல்

வேகப்பந்து வீச்சை நியூஸிலாந்து வீரர்கள் புரட்டியெடுத்ததால், இதற்கு மாற்றாக இந்திய அணி 4 சுழற்பந்துவீச்சு மூலம் தாக்குதல் தொடுத்தது. வருண் சக்கரவர்த்தி, குல்தீப், அக்சர், ஜடேஜா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களும் மிரட்டலாக பந்துவீச, நியூஸிலாந்து அணி 37.5 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இருந்த போது மிடில் ஆர்டரை இழந்தது. மாலை 5 மணி நிலவரப்படி வருண் சக்கரவர்த்தி, குல்தீப் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்து  வீசி இருந்தாலும், ஜடேஜா டெத் ஆர்டரில் மிக அருமையாக பந்து வீசி மிரட்டினார். சிறந்த எகனாமியுடன் 10 ஓவர்களை விரைவாக வீசிய 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை (10-30-1) வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் தோல்வி : லாரா சாதனையை சமன்

செய்த ரோகித் சர்மா நியூஸிலாந்து அணிக்கெதிரான மினி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் இழந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து 15ஆவது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மாவின் தலைமையில் இந்தியா தொடர்ந்து 12ஆவது முறையாக டாஸ் தோல்வியை சந்தித்துள்ளது.  இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அதிகமுறை டாஸ் தோல்வியை சந்தித்த கேப்டன் என்ற வேதனையான சாதனையில் மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

பார்சிலோனா மருத்துவர் உயிரிழந்ததால் லா லிகா போட்டி ஒத்திவைப்பு

கால்பந்து உலகின் முக்கிய கிளப் தொடர் களில் ஒன்றான லா லிகா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரு கிறது. இந்த லா லிகா தொடரில் சனிக்கிழமை அன்று (இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை) நடைபெறவிருந்த பார்சிலோனா - ஒசாசுனா அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.  பார்சிலோனா அணியின் மருத்துவர் கார்லஸ் மினாரோ கார்சியா (53) மரணமடைந்ததன் (மாரடைப்பு எனக் கூறப்படுகிறது) காரணமாகவே இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதாகவும், விரைவில் இந்த ஆட்டம் நடத்தப்படும் என லா லிகா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. போட்டி தொடங்க 20 நிமிடமே இருந்த சூழலில், போட்டி ரத்து செய்யப்பட்டதால் மைதானத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஸ்பெயின் நாட்டின் காட்டலோனியா மைதானத்தில் சிறுது நேரம் பதற்றம் ஏற்பட்டது.  பாராட்டுக்குரியது போட்டி தொடங்கும் முன்பு மற்றும் மைதானத்தில் வீரர்கள் உயிரிழந்தால் மட்டுமே ஆட்டம் ஒத்திவைப்பு அல்லது ரத்து செய்யப்படும். மற்றபடி அணிக்குழுவில் யாரும் உயிரிழந்தால் போட்டி ஒத்திவைக்கப்பட்ட மாட்டாது. சொல்லப்போனால் கிளப் அணியின் உரிமையாளர் மரணமடைந்தால் கூட போட்டி ஒத்திவைக்கப்படாது. ஆனால் ஒரு அணியின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த காரணத்திற்காக கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் கார்லஸ் மினாரோ கார்சியா 2017ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணியின் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.