tamilnadu

img

உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்படம் - ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கை சாடிய திண்டுக்கல் எம்.பி.,

சமையல் உப்பு மற்றும் சர்க்கரையில் காணப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் குறித்த கவலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் ஒன்றிய மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான Toxics Link-இன் சமீபத்திய ஆய்வறிக்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி, ஒரு கிலோ உப்பில் 6.71 முதல் 89.15 வரையிலான பிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ சர்க்கரையில் 11.85 முதல் 68.25 வரையிலான பிளாஸ்டிக் துகள்களும் காணப்படுகின்றன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இழைகள், குருணைகள், படிமங்கள் மற்றும் துகள்கள் வடிவில் உணவுப் பொருட்களில் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

நுகர்வோர் உடல்நலத்தில் பாதிப்பு

ஆய்வு முடிவுகளின்படி, ஒரு சராசரி நபர் தினசரி 5 கிராம் உப்பு மற்றும் 30 கிராம்  சர்க்கரையை நுகர்கிறார். இதன்படி, ஒரு வருடத்திற்கு ஒருவர் சுமார் 3 கிலோ உப்பையும், 11 கிலோ சர்க்கரையையும் உட்கொள்கிறார். இந்த அளவு நுகர்வின் மூலம் ஒரு மனித னின் வாழ்நாள் முழுவதும் உடலில் சேரும் நுண் பிளாஸ்டிக் துகள்களின் அளவும், அவை ஏற்படுத்தக்கூடிய நீண்டகால உடல்நல பாதிப்புகளும் மிகவும் ஆபத்தானவை என எம்.பி., எச்சரித்துள்ளார்.

ஒன்றிய அரசின் அலட்சியம்

இந்த கடுமையான பிரச்சனை குறித்து ஒன்றிய அரசு வெறும் மூன்று நிறுவனங்களில் மட்டுமே - CSIR-IITR லக்னோ, ICAR-CIFT கொச்சி மற்றும் பிட்ஸ்  பிலானி - ஆய்வுகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகள் உணவில் மைக்ரோ/நானோ-பிளாஸ்டிக்குகளை கண்டறியும் பகுப்பாய்வு முறைகளை உருவாக்குதல், ஆய்வுக்கூடங்களுக்கு இடையிலான ஒப்பீடு, மற்றும் கண்டறியப்பட்ட உணவுப் பொருட்களில் மைக்ரோ/நானோ பிளாஸ்டிக்குகளின் அளவை கண்காணித்தல் ஆகிய தளங்களில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. “இந்த மூன்று நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்படும் ஆய்வுகள் இந்த பெரிய பிரச்சனைக்கு தீர்வு காண போதுமானதல்ல. இது சமுத்திரத்தில் பெருங்காயம் கரைப்பது போன்றது. இத்தகைய ஆய்வுகளை பல்வேறு ஆய்வுக்குழுக்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்று சச்சிதானந்தம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவசர நடவடிக்கை தேவை அமைச்சகத்தின் பதிலில் ஆய்வுகள் தொடங்கப்பட்ட காலம், ஒதுக்கப்பட்ட நிதி விவரம், மற்றும் தற்போதைய ஆய்வு முன்னேற்றம் போன்ற முக்கிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்பது கவலைக்குரியது. மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற கடுமையான பொது சுகாதார பிரச்சனையில் ஒன்றிய அரசு தனது மெத்தனமான அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொண்டு, தேவையான ஆய்வுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.