மைக்கேல்பட்டி பள்ளி மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்று சிபிஐ சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி விடுதியில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை அரசியலாக்கியதில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முத்துவேல் முக்கியப் பங்காற்றினார். சிறுமி சிகிச்சையில் இருந்தபோது, தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாணவியை பேச வைத்து, அதனை வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த குற்றச்சாட்டை பள்ளி கடுமையாக மறுத்தது. இதையடுத்து அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி நிர்வாகி சகாயமேரி கைதான நிலையில், தனக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில், மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்றும், பிற வேலைகள் செய்யுமாறு மாணவியை அறிவுறுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.