tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

எம்பாக்ஸ் எனும் அம்மை நோய்

எம்பாக்ஸ் என்பது பெரியம்மை போன்ற ஒரு வைரல் தொற்றாகும். முதலில் குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு குரங்கம்மை என்று பெயரிடப்பட்டது. ஆனால் அது குரங்குகளுக்கு அவப்பெயராக இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் இப்போது இதை எம்பாக்ஸ் என அழைக்கிறது. இது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் பரவுகிறது.  ஏற்கனவே 2022இல் ஒரு முறை தொற்று ஏற்பட்டது. அப்போதே போதுமான தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளித்திருந்தால் இதை தடுத்திருக்கலாம். ஆனால் வசதியான மேலை நாடுகள் தடுப்பூசிகளை ஏராளமாக தங்கள் வசமே பதுக்கி வைத்துக் கொண்டதால் இந்த அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.  இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு தொற்றுகிறது. தொற்று ஏற்பட்ட மனிதர்களுடன் நெருக்கமாக இருத்தல், மாசடைந்த பொருட்களை தீண்டுதல் போன்றவற்றால் ஏற்படுகிறதாம். பால்வினை மூலம் பரவும் நோய் என வகைப்படுத்தவில்லை என்றாலும் சில மக்கள் பிரிவினரிடையே உடல் நெருக்கம் மற்றும் பாலியல் தொடர்பு ஆகியவை மூலமும் பரவுகிறது. காய்ச்சல், தடிப்புகள், நெறிகட்டுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இரண்டு முதல் நான்கு வாரம் வரை நீடிக்கும் இது தானாகவே குணமாகிவிடும். ஆனால் தீவிரமான தொற்று ஏற்பட்டிருந்தால் இரண்டாம் நிலை தோல் தொற்று, சீழ் பிடித்தல், மூளைக் காய்ச்சல், கண் சிவத்தல் ஆகிய சிக்கல்கள் ஏற்படலாம்.  இந்த நோயினால் ஏற்படும் மரண விகிதம் 0.4% இலிருந்து 10 % வரை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறதாம். இதற்கு சில தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் அவற்றின் விலை ஏழை நாடுகளால் வாங்க முடியாத அளவுக்கு உள்ளது. இலவசமாக அனுப்பப்படும் தடுப்பூசிகளையே இந்த நாடுகள் நம்பி உள்ளன. தடுப்பூசிகள் பகிர்தல் மற்றும் அவற்றை பெறுதல் ஆகியவற்றில் உரிமங்கள், அறிவுசார் சொத்துரிமை, வசதியான நாடுகளின் அலட்சியம் ஆகிய தடைகள் உள்ளன. இதனால் கோவிட்-19இன் போது உலகளாவிய சுகாதார அசமத்துவம் மேலதிகமானது. இப்போது எம்பாக்சின் பரவலின்போதும் அவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 

ரோபோக்களை இயக்கும் காளான்கள்? 

திறன், நீடித்திருப்பது மற்றும் பல்தரப்பட்ட திறமைகள் ஆகியவற்றில் வழமையான இயந்திர ரோபோக்கள் உயிருள்ள விலங்குகள் போல் செயல்படுவதில்லை. இதை சீர்செய்யும் விதமாக உயிரிக் கலப்பு ரோபோக்கள்(Biohybrid) எனும் இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. நீந்தும் ரோபோக்களுக்கு தவளையின் தசைகள் பொருத்துதல், நுண்பம்புகளுக்கு மண்புழுவின் திசுக்கள் பயன்படுத்துவது ஆகியவை சோதனை செய்யப்பட்டன.  ஆனால் இந்த திசுக்கள் செயல்படுவதற்கு நுண்ணுயிர் இல்லாத ஸ்டெரைல் எனப்படும் நிலை மற்றும் சீரான இடைவெளிகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் செலுத்துவது ஆகியவை தேவைப்படும். இவற்றிற்கு மாற்றாக காளான்களை பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பல்துறை பொறியாளர்கள் இந்த ஆய்வை செய்துள்ளார்கள். இதில் முப்பரிமாண அச்சு முறையில் உருவாக்கப்பட்ட சாரத்தில் காளான்கள் வளர்க்கப்பட்டன. அவை வளர்ந்து சாரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மின்முனைகளுடன் இணைந்தன. பின் இந்த கருவி, ஒரு ஐந்து கால் ரோபோவுடன் இணைக்கப்பட்டது.  காளான்களின் மைசீலியா எனும் அமைப்பின் மீது புற ஊதாக் கதிர்கள் செலுத்தும்போது அவை மின் சமிக்கைகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் மின்முனைகள் தூண்டப்பட்டு ரோபோவின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் காளன்கள் உருவாக்கும் மின் சமிக்கை பலவீனமடையத் தொடங்குவது; அதிலிருந்து வரும் பலவீனமான சமிக்கைகளை கைப்பற்றுவது போன்ற சவாலகள் உள்ளன. ஆனாலும் இவற்றை சரி செய்து எதிர்காலத்தில் வேளாண்துறை, பாதுகாப்பு துறை ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறாரகள் ஆய்வாளர்கள். 

மரத்தை உடைக்கும் பற்கள் 

விலங்கியலில் கூர்மையான, வலுவான பற்கள் மாமிச உணவிகளுக்கே உரித்தானது என்றே கருதப்பட்டு வந்தது. ஒரு புதிய ஆய்வில் மரக்கறி உணவி ஒன்று வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பற்களை உண்டாக்குவது தெரிய வந்துள்ளது. டைனோசார் இனத்தை சேற்ந்த ஹட்ரோசாரஸ் எனும் விலங்கு, தாவரங்கள் மரங்கள் ஆகியவற்றை தீவிரமாக உண்பவை. இதனால் ஆயிரக்கணக்கான பற்களை உண்டாக்குகின்றன. கிரடேஷியஸ் காலத்தில் வாழ்ந்த இவை அந்தக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பூமியின் பெரும் பகுதியில் ஆதிக்கம் செலுத்தின.  இந்த இனத்தின் முன்னோடியான இகுவானோடான் என்பவற்றிற்கு பல் வளர்வதற்கும் தேய்வதற்கும் 200 நாட்கள் ஆயின. பரிணாம வளர்ச்சியில் கிரடேசிய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த ஹட்ரோசாரஸ் இனத்தின் பற்கள் 50 நாட்களிலேயே தேய்ந்தன என்கின்றனர் ஹங்கேரி பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் அட்டிலா ஒசி மற்றும் அவரது குழுவினர். கடினமான செடிகள் மற்றும் மரங்களை உடைத்து மெல்லுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கும்.