மதுரை, ஜன. 30- மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் தான் மதுரையின் பிரதான பேருந்து நிலையம். தமிழ்நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லா யிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணி களுக்குப் போதுமான வசதிகள் இல்லை. பேருந்து நிலையத்திலிருந்த நாப்கின் விற்பனை நிலையம் மூடப் பட்டு உள்ளது. இது குறித்து நாகர்கோ வில் பேருந்துகள் நிற்குமிடத்தில் நின்று கொண்டிருந்த எம்.பிரமிளா (28) கூறு கையில், “நடைமேடையில் பணம் செலுத்திப் பயன்படுத்தும் கழிப்பறை கள் தான் உள்ளன. இலவசக் கழிப் பறைகளை ஏற்படுத்துவதோடு அதைத் தினமும் பராமரிப்பதை உறுதிசெய்ய வேண்டும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், டயபர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மின்சார எரி யூட்டு இயந்திரத்தை அமைக்க வேண்டும்” என்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கழிப்பறைகள் மிகவும் மோச மான நிலையில் உள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் அறை பூட்டிக்கிடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை மாநகராட்சி யில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் மண்டலத் தலைவர் சரவணப் புவனேஸ்வரி சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ கரிம உரத்தை ரூ.5க்கு விற்பனை செய்வதாகக் கூறப்படும் உரம் விற்பனை மையம் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. சைல்டு லைன் உதவி மையம் மூடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் மேற்கூரைகள் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளன. 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கூரை உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
பேருந்து நிலையத்தில் போதுமான குடிநீர் வசதி இல்லை என்கிறார் சிறு பூ வியாபாரிகள் நலச் சங்க உறுப்பினர் புவனேஸ்வரி. மேலும், முதலாவது நடைமேடையில் செயல்பட்டு வந்த அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை மையம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டியே கிடக்கிறது. தண்ணீரைச் சுத்திகரிக்கும் ஆர்.ஒ. இயந்திரம் செயல்படவில்லை.அப்பகுதியில் அதிக அளவில் காலி மது பாட்டில்கள் தான் காட்சியளிக் கின்றன என்கிறார் அவர்.
பேருந்து நிலையத்தில் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை பொதுக் குழாய்களில் இலவசமாகக் குடிநீர் வருகிறது. அந்த நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வருபவர்கள் மட்டுமே அதிர்ஷ்டசாலிகள். மற்ற நேரங்களில் இங்குள்ள பிரபல உணவகம் தங்களது குழாய்களில் மக்கள் இலவசமாகத் தண்ணீர் பிடித்துச் செல்ல அனு மதிக்கின்றது. இலவசமாகக் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் பாட்டில் விற்பனைக்காகப் போதுமான குடிநீர் வசதி செய்து தர மறுப்பதாகக் கூறுகிறார் ரேச்சல் தாமஸ் (34) என்ற பயணி. அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவரி டம் பேசியபோது, திறந்தவெளி வடி கால்களின் மேற்பகுதிகள் உடைந்து விட்டன. கம்பிகள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்கின்றன. வடிகால்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. திறந்த வெளி வடிகால்கள் மக்களை அச்சு றுத்துவதாக உள்ளது என்றார். அத் தோடு தங்களது கோரிக்கையாக ஓட்டு நர், நடத்துநர் உள்ளிட்ட போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்குப் பணியாளர் அறை வேண்டுமென்றார். எம்ஜிஆர் பேருந்து நிலையத்தைச் சீரமைக்க ரூ.12 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மேயர் இந்திராணி கூறுகையில், ஓரிரு நாட்களில் பேருந்துநிலையத்தில் முழுமையான ஆய்வு நடத்தப்படும். குறிப்பாகப் பாலூட்டும் தாய்மார்களின் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கையுடன் கூறினார்.