மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து 5 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
வெண்டிலேட்டருக்கு மின்சப்ளை இல்லாததால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதற்கு மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது. இந்நிலையில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வெண்டிலேட்டர், மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (55), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் (52) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் பலியாகினர்.
தொடர்ந்து மேலும் இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே உயிருக்கு போராடிய மற்ற நோயாளிகளை காப்பாற்ற பேட்டரிகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் உடனடியாக வெண்டிலேட்டர் இயக்கப்பட்டதால், சிகிச்சையில் இருந்த மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, நிலைய மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா, துறை தலைவர் டாக்டர் செய்யது ஆகியோர், உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே பலியான பழனியம்மாள், மல்லிகா, ரவீந்திரன் ஆகியோர் உடல்கள், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், ‘‘நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் பேட்டரியை இயக்கி, இயங்காமல் போன வெண்டிலேட்டரை சீரமைத்தோம். சுவாசக்கருவி இயங்காமல் போனதால், யாரும் இறக்கவில்லை. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார். மேலும் மின்சார பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான சில உபகரணங்களும் நோயாளிகள் வாங்கி கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித்தகவலும் வெளியாகி உள்ளது.