tamilnadu

img

தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்! - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர்  ஏடு வைர விழா கண்ட பெருமிதத் தோடு 60 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 61 ஆவது  ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இனிய நாளில் தீக்கதிர் வாசகர்கள், ஆசிரியர் குழு, செய்தியாளர்கள், நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட மதுரை, சென்னை,கோவை, திருச்சி, எண்மப் பதிப்பு என 5 பதிப்புகளிலும் பணியாற்றும் தொழிலாளர் தோழர்கள்,  முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீக்கதிர் ஏடு கடந்து வந்த 60 ஆண்டுகள் என்பது வெறும் ஆண்டுக் கணக்கல்ல. பாட்டாளி வர்க்கத்திற்காக அயராமல் படை நடத்தி வந்துள்ள வீர வரலாற்றின் வியத்தகு பக்கங்கள். ஊடக உலகில் உண்மையின் பேரொளி என்ற முத்திரை வாசகத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் தீக்கதிர், கடந்து வந்த பாதை என்பது மலர்களால்  அலங்கரிக்கப்பட்டது அல்ல; நெருப்பு ஆற்றை நீந்திக் கடந்த நீண்ட வரலாறாகும்.

இந்திய பொதுவுடமை இயக்கத்துக்குள் கடந்து வந்த சித்தாந்தப் போராட்டத்தில் உருவானது தீக்கதிர் ஏடு. தோழர் என்.அப்பு என்ற அற்புதசாமியை  ஆசிரியராகக் கொண்டு 1963 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று தீக்கதிர் தனது புரட்சிக்கரப் பயணத்தை துவங்கியது. ‘கோவை தொழிலாளி வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம்’ என்ற வாசகத்துடன் முதல் ஏடு வெளியானது. கோவை தொழிலாளர்கள் கொடுத்த நிதியுதவியுடன் சென்னையில் அச்சடிக்கப்பட்டு, முதல் ஏடு வெளியானது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு, கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் மாறியது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக மாறிய போது, இன்றும் நம்மோடு வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிற தோழர் என்.சங்கரய்யா ஆசிரியராக இருந்தார். நிர்வாகப் பொறுப்பினை வி.பி.சிந்தன் ஏற்றார்.  1969 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்ட போது, தீக்கதிர் அலுவலகமும் மதுரையிலிருந்து செயல்படத் துவங்கியது. 1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தீக்கதிர் நாளேடாக மாறியது. அது முதல், தொடர்ந்து நாளேடாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

1975 இல் அவசரநிலை காலம் அறிவிக்கப்பட்ட நிலையில், தீக்கதிர் ஏடு இரட்டைத் தணிக்கை கொடுமைக்கு ஆளானது. அன்றைக்கு ஜனநாயக தீபத்தை அணையாமல் உயர்த்திப் பிடித்ததில் தீக்கதிருக்கு பெரும் பங்கு உண்டு.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, சமூக விரோதிகளால் மதுரை தீக்கதிர் அலுவலகம் தீக்கிரையானது. ஒருமுறை, தீ விபத்துக்கு உள்ளானது. அப்போதும்கூட, ஒருநாள்கூட தடைபடாமல் தீக்கதிரை கொண்டு வந்த பெருமை அதில் பணியாற்றிய தொழிலாளர்களைச் சாரும். கொரோனா முடக்க காலத்திலும்கூட தீக்கதிர் முடங்கி விடவில்லை. சில மாதங்கள் நாளேடுகளே வெளிவராத நிலையில், எண்ம பதிப்பாக தன்னுடைய பணியை இடையறாது தொடர்ந்தது தீக்கதிர் ஏடு. மதுரையைத் தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி என நான்கு பதிப்புகளாக வெளிவரும் தீக்கதிர், தற்போது எண்மப் பதிப்பாகவும், செயலி, முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் ஆப், யூடியூப் என அனைத்து சமூக  ஊடக வடிவிலும் உலகம் முழுவதும் உண்மையின் பேரொளியை பரப்பி வருகிறது. 

ஊடக உலகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டு தீக்கதிரும் தன்னை மேம்படுத்திக் கொண்டு வந்துள்ளது. ஆனால், ஒருபோதும் தன்னுடைய வர்க்க நிலைபாட்டில் சமரசம் செய்து கொண்டதில்லை.  இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் ஊடக ஜனநாயகத்தை முடக்க முயல்கிறார்கள். கார்ப்பரேட் மயமாகிப் போன ஊடகங்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக தினம் தினம் மாரீச யுத்தம் நடத்தி வருகிறது. பாட்டாளி வர்க்கச் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன பெரும்பாலான ஊடகங்கள். இந்தப் பின்னணியில் தமிழக உழைக்கும் மக்களின் வாளும் கேடயமுமாக பணியாற்றி வருகிறது நம்முடைய தீக்கதிர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடாக மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பெருங்குரலாக பெருமுழக்கம் செய்கிறது தீக்கதிர்.  கட்சிப் பத்திரிகை கட்சியின் அமைப்பான ‘என்று பிரகடனம் செய்த மாமேதை லெனின் அவர்கள் நடத்திய இஸ்க்ரா’ என்ற ஏட்டின் தாக்கத்தினால் தீக்கதிர்  என்று பெயரிடப்பட்ட இந்த ஏடு, அநீதிகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும், உழைக்கும் மக்களின் பேரரணாகவும் செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரல்தான் தீக்கதிர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மறுக்கப் பட்டோர், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கான போர்க்கருவியாக விளங்குகிறது தீக்கதிர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடாக மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பெருங்குரலாக பெருமுழக்கம் செய்கிறது தீக்கதிர்.  கட்சிப் பத்திரிகை கட்சியின் அமைப்பான ‘என்று பிரகடனம் செய்த மாமேதை லெனின் அவர்கள் நடத்திய இஸ்க்ரா’ என்ற ஏட்டின் தாக்கத்தினால் தீக்கதிர்  என்று பெயரிடப்பட்ட இந்த ஏடு, அநீதிகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும், உழைக்கும் மக்களின் பேரரணாகவும் செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரல்தான் தீக்கதிர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மறுக்கப் பட்டோர், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கான போர்க்கருவியாக விளங்குகிறது தீக்கதிர். 

கட்சியின் மாநிலத் தலைவர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சந்தா சேர்ப்பு பணியில், இந்த 10 நாளும் மொத்தமாக முழுவீச்சுடன் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு, பணிகள் உற்சாகமாக நடந்து வருகின்றன. பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக, மதவெறி சக்திகள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அவர்களது பொய்த் தயாரிப்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதை எதிர்கொள்ள வேண்டுமானால், உழைக்கும் மக்கள் கையில் உள்ள உருக்கு போன்ற ஆயுதம்தான் தீக்கதிர். இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்முகத்தன்மை உள்ளிட்ட விழுமியங்களை பாதுகாக்கவும் தமிழ், தமிழ்நாட்டின் நலன் காத்து நிற்கவும் தீக்கதிரின் பணி இன்றியமையாதது. வீதி விதியாக, வீடு வீடாக செல்வோம்! தீக்கதிரின் சந்தாதாரர்களை பன்மடங்காக்குவோம்! தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்!