tamilnadu

img

யுஜிசி விதிகளுக்கு எதிராக கேரள அரசு தேசிய மாநாடு

யுஜிசி விதிகளுக்கு எதிராக கேரள அரசு தேசிய மாநாடு

உயர்கல்வித் துறையை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலான, ‘வரைவு யுஜிசி விதிமுறைகள்- 2025’-க்கு எதிரான, அகில இந்திய அளவிலான மாநாட்டை  கேரள உயர்கல்வித் துறையானது, அம்மாநிலத் தலைநகரான திருவனந்த புரத்தில் நடத்தியது. தென் மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்பு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களின் கல்வி அமைச்சர்கள், குறிப்பாக, தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா, கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் எம்.சி. சுதாகர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி. செழியன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த மாநாட்டைத் துவக்கி வைத்து, கேரள  முதல்வர் பினராயி விஜயன் உரை யாற்றினார்.  அப்போது, “யுஜிசி வரைவு விதிகள், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சி” என்று அவர் சாடினார். “யுஜிசி வரைவுத் திட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர்கல்வித் துறையை கையகப் படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சியும் இதில் அடங்கியுள்ளது” எனவும் குற்றம் சாட்டினார்.

உயர்கல்வித்துறையை நாசமாக்கத் திட்டம்

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “யுஜிசி வரைவுத் திட்டங்கள் உயர்கல்வித் துறைக்கு தீங்கு விளைவிக்கும். இதில், துணைவேந்தரை நியமிக்க  ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு ள்ளது. மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. இது பல்கலைக்கழகங்களில் அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் நுழைவதற் கான வாய்ப்பையே உருவாக்கும்” என்றார். “நாட்டின் உயர்கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக- யுஜிசியின் வரைவுத் திட்டத்திற்கு எதிராக நாம்  (மாநிலங்கள்) ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். இந்த மாநாடு அதற்கான முதல் படியாக இருக்க வேண்டும்” என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர் களை, பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.

சட்டமன்றங்களின் அதிகாரம் பறிப்பு

“உதாரணமாக, புனே திரைப்பட  பயிற்சி நிறுவனம் முதல் ஐசிஎச்ஆர் வரையிலான முக்கிய நிறுவனங்களில் அரசியல் நியமனம் நடந்ததை நாம் பார்த்தோம்” என்றும், “இதுபோன்ற நகர்வு உயர்கல்வித் துறையில் நடப்பதை தடுப்பதற்கான மசோதாவை கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி னோம்; அதை ஆளுநர் கிடப்பில் போட்டதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தையும் நாடியுள்ளோம்” என்று கூறிய முதல்வர் பினராயி விஜயன், “சட்டமன்றங்களின் அதிகாரங்கள்கூட அபகரிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார். “யுஜிசி-யின் புதிய வரைவு அறிக்கையில் துணைப் பேராசிரியர் நியமனம், பதவி உயர்வு போன்ற வற்றுக்கு கூறப்பட்டுள்ள நிபந்தனை களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

கேரள எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்பு

முன்னதாக, மாநாட்டுக்கு கேரள உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தலைமை வகித்தார்.  கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உள்ளிட்ட கேரள சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், கேரள உயர்கல்வித் துறையின் பல் வேறு நிறுவனங்களின் தலைவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி யாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதி களும் கலந்து கொண்டனர்.

அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சி மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பேச்சு

கேரள உயர்கல்வித்துறை நடத்திய மாநாட்டில், தமிழகத்தின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “யுஜிசி நெறிமுறைகள் குறித்த இந்த முக்கியமான மாநாட்டில் தமிழ்நாடு மாநிலத்தின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்துரைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என்று கூறிய கோவி. செழியன், “யுஜிசியின் சமீபத்திய வரைவு நெறிமுறைகள் வருங்காலத்தில் மாநிலத்தின் சுயாட்சியினை முழுவதுமாக பறிக்கும் வகையில் உள்ளது” என்று விமர்சித்தார். “ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை மற்றும் பல நுழைவு மற்றும் பல வெளியேறுதல் (Multiple Entry and Multiple Exist (MEME)) கல்வி முறையை சீர்குலைக்கும். இந்த சேர்க்கைகள் கட்டமைப்பு சவால்களை உருவாக்குகின்றன. எம்இஎம்இ இடைநிற்றல்களை ஊக்குவிக்கிறது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் மாணவர்களை தக்கவைப்பதை மேம்படுத்துவதற்கும் மேற்கொண்டுள்ள நமது மாநிலத்தின் முயற்சிகளுக்கு எதிரானது. இந்த விதிகளைப் பின்பற்றப்படவில்லையெனில் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்பதும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை இரத்து செய்வோம் என்பதும் ஜனநாயக விரோதமானவை” என்று சாடினார். மேலும், “ஒன்றிய - மாநில உறவுகளில் மாநில அரசின் உரிமைகளில் கடுமையான தாக்குதலை ஏற்படுத்துகிறது. யுஜிசி சட்டம், 1956-இன் பிரிவு 26-இன் கீழ், உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்ட இந்த நெறிமுறைகள் மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங் களை செயல்பாடற்றதாக ஆக்கும் நோக்கம் கொண்டது” என்று தெரிவித்த  அமைச்சர் கோவி. செழியன், “வரைவு யுஜிசி விதிமுறைகளை அமல்படுத்தும் முயற்சி, அத்துமீறலே தவிர வேறில்லை. சட்டப் பிரிவு 12(d)-இன் கீழ், யுஜிசி-யின் அதிகாரங்கள் வெறும் பரிந்துரை மட்டுமே. யுஜிசி உயர்கல்வியில் தரநிலைகள் குறித்து ஆலோசனை கூறலாம். ஆனால், அது மாநிலங்களை கட்டாயப்படுத்தி அமல்படுத்த முடியாது. இந்த வரைவு விதிமுறைகள், அதிகாரப் பிரிவினை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய இரண்டும் அரசியலமைப்பின் ‘அடிப்படை அம்சங்களாக’ இருப்பதை சீரழிப்பதற்கான ஒரு முயற்சி” எனவும் குற்றம் சாட்டினார்.