tamilnadu

img

சென்னை மழை : முதல்வரின் களப்பணிக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

மயிலாடுதுறையில் திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக அவர் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகவும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சென்னை மழையின்போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்ட களப்பணிகளை அவர் பாராட்டினார். பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களுக்கு முறையான கணக்கெடுப்பு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்காததை அவர் விமர்சித்தார். ஆளுநர் ரவி தமிழர் பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஆளுநர் பதவி தேவையில்லை எனவும், பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் விமர்சித்தார். தமிழ் தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ என்ற சொல் விடுபட்டதற்கு, முன்பே தீர்வு காண வேண்டியிருந்ததாக தெரிவித்தார். மேலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்களை நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.