ஒரத்தநாடு வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு
தஞ்சாவூர், மே 23- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில், 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பராமரிக்கும் கிராம கணக்கு பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை தொடர்பான 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு விசாரணையில் உள்ளன. இந்த தீர்வாயத்தில் ஒரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த உக்கடை, காரமுடுக்கு தட்டுமால்படுகை, நெடுவாசல், மகிமாலை, மகிமாலை பிட், தீபாம்பாள்புரம், நெய்குன்னம், கீழக்கோவில்பத்து, வடபாதி, கம்பயநத்தம், சூழியக்கோட்டை மற்றும் கம்பயநத்தம் பாகம், அருந்தவபுரம்-1, அருந்தவபுரம்-2, புத்தூர், புளிக்குடி-1, புளிக்குடி-2 ஆகிய வருவாய் கிராமங்களில் வருவாய் தீர்வாயம் பசலி 1434-ல் ஏராளமான பொதுமக்கள் பட்டா பெயர் மாற்றம், பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய பிரதிநிதிகளிடம் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். முன்னதாக, ஒரத்தநாடு வட்டத்தின் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) வருவாய்த்துறை மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பட்டா மாற்ற ஆணை, இறப்புச்சான்று, பிறப்புச் சான்று, பெயர் திருத்தம், உதவித்தொகை என 47 பயனாளிகளுக்கு ஆணைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.