பணிநியமன ஆணைகள் வழங்கல்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் பதவிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு, தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியம் தண்டலை கிளை, சிங்களாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கட்சியின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ். கதிர்வேல் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், எம்.கலைமணி, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் சுந்தரய்யா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.கஜேந்திரன், கட்சியின் மூத்த நிர்வாகி என். இடும்பையன், வி.ச ஒன்றியச் செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
ஓடும் ரயிலில் வாலிபரிடம் லேப்டாப், செல்போன் திருடியவர் கைது
மன்னார்குடி கீழத்தெருவை சேர்ந்த வைத்தியநாதன்(30) என்பவர், சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில் நின்று புறப்பட்டபோது, அவர் தூங்கி விட்டார். மன்னார்குடி வந்த பிறகு விழித்துப் பார்த்த வைத்தியநாதன், தான் வைத்திருந்த லேப்டாப், செல்போன் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு பணியில் இருந்த ரயில்வே காவலர் பாரதி என்பவரிடம் இதுகுறித்து கூறினார். அப்போது ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு நபர் லேப்டாப் பேக்குடன் நின்று கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த வைத்தியநாதன் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து, தஞ்சாவூர் ரயில்வே காவலர்களிடம் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் பாஸ்கரன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர்கள் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த உதயகுமார்(23) என்பதும், வைத்தியநாதனிடம் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து உதயகுமாரை காவல்துறையினர் கைது செய்து லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்தனர்.