tamilnadu

img

உண்மை கண்டறியும் குழுவினர் மீது ஈஷா யோகா மைய குண்டர்கள் தாக்குதல்

கோயம்புத்தூர், ஜூன் 15- ஈஷா யோகா மையம் முறைகேடாக மின் மயானம் அமைப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற உண்மை கண்டறியும் குழுவினர் மீது ஈஷா யோகா மையத்தின் குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை ஆலாந்துறையை அடுத்த இக்கரை போளுவாம்பட்டி கிராமம், முட்டத்துவயல் பகுதியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட் டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி இருந்தார். இதனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா? பழங்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து கண்டறிய தந்தை பெரியார் திராவிடர் கழகம், வெள்ளிங்கிரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இணைந்து உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருந்தன.  இக்குழுவினர் வெள்ளியன்று ஒரு வாகனம் மூலம் இக்கரை போளுவாம்பட்டிக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். இவ்வாகனம் ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில் அருகே சென்ற போது அங்கிருந்த ஈஷா யோகா மையத்தின் குண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். உள்ளே செல்ல அனுமதிக்காமல் சாலையின் குறுக்கே மாட்டு வண்டி, டிராக்டர் போன்றவற்றை சாலையில்  நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். 

ஒரு கட்டத்தில், உண்மை கண்டறியும் குழுவினர் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இவை அனைத்தும் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மை கண்டறி யும் குழுவினர் வருகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு ஈஷா யோகா மையத்தின் குண்டர்கள் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இ தனையடுத்து, ஒரு கட்டத்தில் போலீசார் தலையிட்டு ஈஷா யோகா மையத்தின் குண்டர் களை சமாதானப்படுத்தியும், உண்மை  கண்டறியும் குழுவினரை திரும்பிப்போகச் சொல்லியும் ஈஷா மையத்தின் மீதான விசுவா சத்தை வெளிப்படுத்தினர்.

 இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டி ணன் கூறுகையில், கோவை பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில், அமெரிக்க கவுண்டர் என்பவர், பழங்குடி மக்க ளுக்கு 44.3 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இந்நிலத்தை போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தின்  ஆட்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தியது தொடர்பாக கடந்த 2016 டிசம்பரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கங்கள் இணைந்து பெரும் போராட்டம் நடத்தின.  இதனையடுத்து, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சு வார்த்தைக்கு பிறகு 44.3 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்றும் மேலும் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்நிலையில் ஈஷா யோகா மையம் மின்மயா னம் ஒன்றை கட்டி 44.3 ஏக்கர் நிலத்தில் குளம் ஒன்றை வெட்டி மின்மயானக் கழிவுகளை கொட்டி, பழங்குடி மக்கள் அந்த நிலத்தை பயன் படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த ஈசா பவுண்டேசன் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ள தாக தகவல் கிடைத்தது. இதனையடுத்தே உண்மை நிலவரம் என்ன என்பதை அறிய முற் போக்கு அமைப்புகள் சார்பாக உண்மை அறியும் குழு மூலமாக கள ஆய்வு செய்ய சென்றோம். அப்போது ஈஷா யோகா மையத்தின் குண்டர்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலை யிலேயே தாக்குதலை நடத்தினர்.  இதுபோன்ற நடவடிக்கைகளால் எங்களை முடக்கிவிட முடியாது. ஈஷா யோகா மையத்தின் முறைகேடுகளை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றார்.