சென்னை, செப்.11- விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களில் சில படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப் பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. அதன்படி சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் விரைவு ரயில் (எண் 12603) 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டது. வருகிற ஜனவரி 20 ஆம் தேதி முதல் 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படும். ஜனவரி 16 ஆம் தேதி முதல் புதுச்சேரி-மங்களூர் விரைவு ரயில் (16855), ஜனவரி 17 ஆம் தேதியில் இருந்து சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 12689), ஜனவரி 18 ஆம் தேதி முதல் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் (16361), கொச்சுவேலி-நிலாம்பூர் ராஜ்ய ராணி விரைவு ரயில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும். இதேபோல் சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா விரைவு ரயில் (22639), திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு காவிரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரயில் (22651) ஜனவரி 20 ஆம் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும். மேலும், விழுப்புரம்-கோரக்பூர் விரைவு ரயில் (22604) ஜனவரி 21 ஆம் தேதி முதல், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரயில் ஜனவரி 22 முதல், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில் ஜனவரி 26 ஆம் தேதி முதல் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.