tamilnadu

img

சிஆர்பிஎப் தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட அமைக்கவில்லை... உள்துறை அமைச்சர்-சிஆர்பிஎப் இயக்குனருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்

மதுரை:
மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட அமைக்கப்படவில்லை என்று அதிர்ச்சி தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,  தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களுக்காக ஒரு தேர்வுமையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்துறை அமைச்சர்-சிஆர்பிஎப் இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள வர்களின் பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். மத்திய ரிசர்வ் காவல் படை 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனத் தேர்வு முறைமைக்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குரூப் “பி” மற்றும் குரூப் “சி” அமைச்சுப்பணி அல்லாத (Non ministerial), பதிவிதழில் இடம்பெறாத, மோதல் முனைகளில் பணிபுரிகிற அகிலஇந்தியப் பணிகளுக்கானவை ஆகும். விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக31.08.2020 அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த காலியிடங்கள் 780-ஐ விட அதிகம். எழுத்து தேர்வு 20.12.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கையில் தேர்வுமையங்கள் 9 இடங்களில்இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. வட மாநிலங்களில் 5 மையங்கள் அமைந்திருப்பதில் தவறில்லை. ஆனால் சமத்துவ அணுகுமுறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லைஎன்பதே பிரச்சனை. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. 

இத்தகைய சமத்துவமற்ற பங்களிப்பு, தமிழக,புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். அதிலும் குறிப்பாக இன்றைய கோவிட்- 19 சூழல்,மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்சனைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாக மாறக் கூடாது. ஆகவே, தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டுகிறேன். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்தபட்சம் ஒருமையத்தை இவ் விரு பகுதிகளிலும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  தற்போது விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஏற்கெனவே முடிந்து விட்டநிலையில் மறு அறிவிக்கைவெளியிட்டு, மாற்றங்களின் காரணமாக, அதன் தேதியிலிருந்து கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கி புதிய விண்ணப்பங்களையும் வரவேற்குமாறு வேண்டுகிறேன். இப் பிரச்சனையின் நியாயத்தை ஏற்று சாதகமான முடிவை விரைவில்எடுக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.