tamilnadu

வியக்க வைப்பேன்!


கோவி.பால.முருகு

வானில் ஏறி வான வில்லின்
    வண்ணம் அள்ளுவேன்-அதில்
நாணைப் பூட்டி  நாலு  பாட்டை
    நானும் பாடுவேன்!

கோள்கள்  சென்று குதித்து இறங்கி
    கொண்டாடி   வருவேன்-அங்கே
ஆள்கள் இருந்தால் அவர்களை இங்கே
    அழைத்து வருவேன்!

சந்திரன், செவ்வாய் புதனுக்குக் கூட
    சட்டென்று போவேன்-அங்கே
காந்தி இராட்டை சுற்றும் பாட்டியை
    கண்டு வருவேன்!

விண்ணில் கிடக்கும் விண்மீன் எல்லாம்
    விரும்பி அள்ளுவேன்-அதில்
வண்ண மலரைச்  சேர்த்து   நல்ல
    வடிவை ஆக்குவேன்!

மேகக் கூட்டம் உள்ளே நுழைந்து
    மேனி சிலிர்ப்பேன்-அதைத்
தாகம் தீர்த்து  மழையைத் தந்திட
    தரணிக் கழைப்பேன்!

மின்னல் கொடியைக் கொண்டு வந்து
    மேலே கட்டுவேன்-அதில்
வண்ண பொம்மை  வகையைச் சேர்த்து
    வியக்க வைக்குவேன்!