கோவி.பால.முருகு
வானில் ஏறி வான வில்லின்
வண்ணம் அள்ளுவேன்-அதில்
நாணைப் பூட்டி நாலு பாட்டை
நானும் பாடுவேன்!
கோள்கள் சென்று குதித்து இறங்கி
கொண்டாடி வருவேன்-அங்கே
ஆள்கள் இருந்தால் அவர்களை இங்கே
அழைத்து வருவேன்!
சந்திரன், செவ்வாய் புதனுக்குக் கூட
சட்டென்று போவேன்-அங்கே
காந்தி இராட்டை சுற்றும் பாட்டியை
கண்டு வருவேன்!
விண்ணில் கிடக்கும் விண்மீன் எல்லாம்
விரும்பி அள்ளுவேன்-அதில்
வண்ண மலரைச் சேர்த்து நல்ல
வடிவை ஆக்குவேன்!
மேகக் கூட்டம் உள்ளே நுழைந்து
மேனி சிலிர்ப்பேன்-அதைத்
தாகம் தீர்த்து மழையைத் தந்திட
தரணிக் கழைப்பேன்!
மின்னல் கொடியைக் கொண்டு வந்து
மேலே கட்டுவேன்-அதில்
வண்ண பொம்மை வகையைச் சேர்த்து
வியக்க வைக்குவேன்!