சொட்டு நீர் பாசனத்திற்கு நூறு சதவீத மானியம்: தோட்டக்கலை துறை அழைப்பு
பாபநாசம், ஜுன் 24- சொட்டு நீர் பாசனத்திற்கு நூறு சதவீத மானியம் பெற தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டாரம் தோட்டக்கலைதுறை மூலம், நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் தரப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் தரப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மட்டுமல்லாமல் தெளிப்பு நீர் மற்றும் மழை தூவானுக்கும் இம்மானியம் தரப்படும். சொட்டு நீர்ப்பாசன முறையானது பயிருக்குத் தேவையான குறைவான வீதத்தில் நீண்ட நேரம் மண்ணின் தன்மைக்கேற்ப, சொட்டுவான்கள் மூலம் நேரடியாக பயிரின் வேர்பகுதிக்கு நாள்தோறும் செலுத்தும் முறையாகும். காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள், மலைத் தோட்டப்பயிர்களான தென்னை, பாக்கு ஆகிய பல பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தலாம். இம்முறையில் நீர் விரயம் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில் பாசன நீர் கிடைப்பதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கிறது. மேலும் மின்சக்தி பயன்பாட்டை குறைக்கலாம். நீர் பயன்படுத்தும் திறன் 60 முதல் 80 சதவீதம் வரை அதிகரிக்கிறது. பயிர் விளைச்சல் 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. பயிருக்கு தேவையான அளவில் உரங்களை பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப பாசன நீருடன் பகிர்ந்து அளிக்க முடிவதால் தரமான விளைபொருள் உற்பத்தி செய்ய முடிகிறது. களை வளர்வது கட்டுப்படுவதால் வேலையாட்கள் தேவையும் குறைவு.
திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்கள்:
ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு குறு விவசாயி சான்றிதழ் (சிறு குறு விவசாயி எனில்) மோட்டார் மின் இணைப்பு நகல். மேலும் விவரங்களுக்கு பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜுன் 24- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.06.2025 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் பயிர்சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.