பழனி கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் ஜி, மன்னிப்பு கேட்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இயக்குநர் மோகன் ஜி, பழனி கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய நிலையில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து திருச்சி நீதிமன்றம் இவரை ஜாமினில் விடுவித்தது. இதனை தொடர்ந்து, பழனி காவல் நிலையத்திலும் மோகன் ஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் ஜாமின் கோரி மோகன் ஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்றது.
அப்போது, இது தொடர்பாக மோகன் ஜி பேட்டி கொடுத்த அதே யூடியூப் சேனலில் மன்னிப்புக் கேட்டு பதிவிட வேண்டும். தமிழ், ஆங்கில நாளிதழில்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.