விபத்தில், பேரிடரில், பயங்கரவாத நாசவேலையில் சிக்கி,குடும்பத் தலைவனை, குலக்கொழுந்தை இழந்து கையறு நிலையில் நிற்கும் குடும்பத்துக்கு அரசு வழங்கும் இழப்பீடு,தற்காலிக நிவாரணமே. இந்த இழப்பீடு மரணமடைந்தவர் வாழ்வை மதிப்பீடு செய்வதன் மூலம் கணக்கிடப்படுகின்றது. வாழ்வை மதிப்பிட பலவகையான காரணிகள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட மனித வாழ்வை மதிப்பிடுவதிலும் கார்ப்பரேட் அரசியல் உள்ளது என்பதை நுட்பமாக பேசுகிறது “மதிப்பு (Worth)” என்ற 2021 இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்.
செப்டம்பர் 11, 2001, நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் 7631 பேர் கொல்லப்படுகின்றனர். விபத்தை ஏற்படுத்திய விமான நிறுவனங்களிடம் நீதிமன்றம் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி னால் கோடிக்கணக்கான டாலர்களை நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். விமான நிறுவனங்கள் திவா லாகும். இதிலிருந்து விமான நிறுவனங்களை பாது காக்க, Corporate Bailout போன்று, அரசே முன்வந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டு நிதி (Victims Compensation Fund) உருவாக்குகிறது. இந்த நிதியத்தில் எண்பது சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வர்கள் உரிமை கோரினால் தான் விமானக் கம்பெனி கள் மீது வழக்கு தொடர முடியாது.
அட்டர்னி ஜெனரலும் முன்னாள் வெள்ளை மாளிகை சீப் ஆஃப் ஸ்டாப்-ஆன ஃபைன்பெர்க், இந்த நிதியை நிர்வகிக்கும் சிறப்பு மாஸ்டராக நியமனமாகிறார். நிதியை இழப்பீட்டாளர்கள், அனைவருக்கும் ஒரே அளவில்(Flat rate)வழங்காமல்,இறந்தவரின் வரு மானம்,சொத்து அடிப்படையில் உருவாக்கப்பட்ட சூத்திரம் மூலம் வழங்கவேண்டும். டிசம்பர் 22,2003க்குள் இப்பணியை முடிக்க வேண்டும். எண்பது சதவீதமான பாதிக்கப்பட்டோரை இந்நிதியின் பயனர்களாக்கவேண்டும். இதுவே அரசின் (செனட்டின்) நிபந்தனைகள். பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு அறிமுக கூட்டத்தை ஃபைன்பெர்க் நடத்துகிறார். நிதியை விநியோகிக்கும் சூத்திரத்தை விளக்குகிறார்.இதனை பங்கேற்பாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்றனர்.Flat Rateல் ஒரே மாதிரியான நிவாரணத்தையே கோருகின்றனர். தாக்கு தலில் மனைவியை இழந்த சார்லஸ் வுல்ஃப் என்ற பங்கேற்பாளர், எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கி றார். சூத்திரத்திற்கு எதிரான”Fix the fund”என்ற இணைய அமைப்பை உருவாக்குகிறார். ஃபைன்பெர்க் மற்றும் சார்லஸ் வுல்ஃப் இருவேறு செயல் திட்டத்தோடு களத்தில் நிற்கின்றனர். இச்சூழ லில், அவகாச காலத்திற்குள் இலக்கு நிறைவேற்றப் பட்டதா? பதில் படத்தில்.
“அன்று தான் என் மகன் இரட்டை கோபுரத்திற்கு வேலைக்கு சென்றான்.மிக சந்தோசமாக இருந்தான்.அப்போது கோபுரம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்தேன்.இடிபாடுகளுக்குள் என் மகன் மாட்டி யிருக்கக்கூடும். இறைவனிடம் மன்றாடினேன். சிக்கிய வர்கள் அனைவரும் இறந்தனர். என் மகனையும் இழந்தேன். அப்போது நான் கடவுள் மீதும்,இந்த அமெரிக்கா மீதும் மிகுந்த கோபமாக இருந்தேன். ஏனென்றால் இந்த கொடும்பாதகச் செயல் நடக்க இவர்களும் காரணம். இவர்களால் என் அழகிய மகன் உயிரோடு எரிந்து சாம்பலாகிவிட்டான். என் மகனின் இழப்பை எவ்வாறு கணக்கிடுவது”. இது ஒரு தாயின் கதறலான பேட்டி. ஃபைன்பெர்க், சட்டம் பயிலும் மாணவர்களிடம், மனிதனின் வாழ்க்கையின் பண மதிப்பை விளக்க, மாணவர்களையே வாதி, பிரதிவாதியாக்கி வகுப்பெ டுக்கிறார். “உதாரணத்திற்கு ஃபரன் என்பவன், தன் உற வினரின் பண்ணையில் உள்ள கதிரடிக்கும் இயந்தி ரத்தில் சிக்கி உயிர் இழப்பதாக வைத்து கொள்வோம். அவனது ஆதரவற்ற தாய் படேலுக்காக மாணவன் டிக்கன்ஸனும், பண்ணை உரிமையாளர் மற்றும் கதிர டிக்கும் இயந்திரக் கம்பெனி சார்பாக மாணவி சென் வாதாடினால், இருவரும் என்ன முடிவெடுப்பீர்கள்?” என ஃபைன்பெர்க் கேட்கிறார். சென் 2.7 மில்லியன் டாலர் மட்டுமே இழப்பீடு தருவதாகவும்,ஆனால் டிக்கன்ஸன் இழப்பீடாக மூன்று மில்லியன் டாலர் கோரு வதாகப் பதிலளிப்பர். இதற்கு ஃபைன்பெர்க் எண்க ளால் முடிவெடுத்த இருவரையும் பாராட்டி, இதுவே உங்களுக்கான வேலையென அங்கீகரிக்கிறார்.
தனது அன்புக்குரியவரின் மதிப்பிடமுடியா இழந்த வாழ்வை நேசிக்கின்ற தாய்; எண்களாலான பணமே வாழ்வின் மதிப்பை நிர்ணயிக்கிறது என்ற இருவேறு கருத்தாக்கங்களை நம் முன் பட ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுகிறார்கள். உள்ளுக்குள் கார்ப்பரேட் பாசம். வெளியே மக்கள் ஆதரவு வேஷம். அரசின் இரட்டை வேடத்தை இப்படம் தைரியமாக அம்பலப்படுத்தியுள்ளது. பாதிப்படைந்த தன்பாலினத்தவருக்கு நியூயார்க் நகரச்சட்டப்படி இழப்பீடு வழங்கியும், வர்ஜீனியா மாநிலச் சட்டப்படி வழங்காதது, தீவிரவாதத் தாக்கு தலைவிட மோசமானது. உண்மைச் சம்பவத்தை பெண் இயக்குநர் ஷாரா ஹொலேன்ஜிலோ, ஆவணப்படத் தன்மை ஏதுமின்றி கதை அம்சத்தோடு சிறப்பாக இயக்கியுள்ளார். ஃபைன்பெர்க், வாக்மேன் மாட்டிக்கொண்டு, நியூயார்க் நகர ரயிலின் ஜன்னலோரத்தில், யானியின் நைட்டிங்கேல் இசையை ரசித்துக்கொண்டு பயணிக்கி றார். சக பயணிகளுக்கு செல்பேசி மூலம் 9/11 தாக்குதல் செய்தி வர,பதறி அடித்து இருக்கையை விட்டெழுந்து அங்குமிங்கும் ஓடுகின்றனர். திடீரென இதனைக் கவ னித்த ஃபைன்பெர்க், ஜன்னல் பக்கம் எட்டிப் பார்க்கி றார். ரயிலின் வெளிப்புறத்திலிருந்து கேமரா, இரட்டை கோபுரம் எரிந்து புகை வருவதை ஜன்னல் ஆடியில் பிம்பமாகவும், ஃபைன்பெர்க்கின் பதறிய முகத்தை நிஜத்திலும் சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது வித்தியாசமானது.
இசை, கதை ஓட்டத்தோடு நெருங்கவில்லை. சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தும் திரைக்கதை. படத் தொகுப்பு சிறப்பு. ஃபைன்பெர்க் பாத்திரமேற்றுள்ள மைக்கேல் ஹீட்டன் உள்ளிட்ட அனைவரும், அடுத்து இப்படித்தான் நடிப்பார்கள் என யூகிக்கமுடிகிறது. கடினமான பொருளை(Subject ) திரைக்கதைக்கு தேர்ந்தெடுத்த படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். சமீபத்திய,கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வழங்கிய பண நிவாரணம், குடிப் பழக்கத்தை ஊக்கமூட்டுகிறது என்பது ஒரு சாராரின் கருத்து.இதனோடு, வாழ்வின் மதிப்பை பணத்தால் கணக்கிடும் இப்படக் கருத்தையும் மனதுக் குள் விவாதிக்க வைத்ததே இப்படத்தின் சிறப்பு. இப்படம் பிரைம் அமேசானில் உள்ளது.