tamilnadu

img

நல்லாப் போட்டீங்க, கோடு...!! - கணேஷ்

என்ன இடுப்புல கை வெச்சுக்கிட்டு ஏதோ யோசனைல நின்னுட்ட..
அங்கிள், இப்புடி நிக்குறதப் பாத்தா உங்களுக்கு என்ன தோணுது..?
இப்புடித்தான் என்னைய ரெண்டு மணி நேரமா கேட்டுட்டே இருக்கா.. பக்கத்து வீட்டு அம்மா குறுக்கே புகுந்தார்.
நீயே சொல்லிற வேண்டியதுதானே..?
நீங்கதான் இப்புடிலாம் கற்பனை பண்ணிப் படிக்கணும்னு சொல்லிருக்கீங்க.. இது நடன மங்கை..
ஓ.. அதான் வலது கைய இடுப்புல வெச்சுருக்கியா..?
ஆமா.. மொகஞ்சதாரோவுல கிடைச்ச வெண்கலச் சிலை.. ஆனா, நான் இடது கைல வளையல் போட்டுக்கல..
அதான் போட்டுருக்கியே.. - அம்மா.
பாத்தீங்களா, அங்கிள்.. அந்த நடன மங்கை கிட்டத்தட்ட தோள்ல இருந்து கை முழுக்க போட்டுருப்பாங்கள்ல.. 
அப்போ, படிக்குறதுக்காக இப்புடி நிக்கல.. வளையல் வாங்கணும்.. அதான.. - மீண்டும் அம்மா.
அப்புடி இல்லம்மா.. அந்த நடன மங்கை நிறைய வளையல் போட்டுருப்பாங்க..
அவங்க கிட்ட நிறைய காசு இருந்துருக்கும் சார்.. 
அங்கிள், கேட்டீங்களா.. நாங்க வறுமைக்கோட்டுக்கு மேலதான இருக்கோம்..
போங்கப்பா.. நல்லா போட்டீங்க கோடு.. என்றவாறே அவர் உள்ளே சென்றார்.
என்ன அம்மா கொஞ்சம் களைப்பா தெரியுறாங்க?
அவங்களுக்கும் பாவம் முடியல, அங்கிள்.. சாப்பாடே ஒழுங்கா இல்ல..
சத்தான உணவுதான்மா நம்ம கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கோமா, இல்லனா அந்தப்பக்கம் இருக்கோமானு தீர்மானிக்கும்..
நானும் படிச்சிருக்கேன்.. கிராமப்புறத்துல 2,400 கலோரியும், நகர்ப்புறத்லுல 2,100 கலோரியும் எடுத்தாதான் கோட்டுக்கு மேல..
ஆமா.. ஆனா, இப்பல்லாம் கோடு சின்னதா மாறிடுச்சு.. உலக வங்கி முன்னாடி 1.90 அமெரிக்க டாலர் ஒரு நாளைக்கு வருமானமா வந்தா, கோட்டுக்கு மேலனு சொல்லுச்சு... இப்போ, 2.15 டாலர்னு சொல்றாங்க.. அதாவது ஒரு நாளைக்கு 178 ரூபாய்.. 
நல்லவேளை.. இப்பல்லாம் பெண்கள் வேலைக்குப் போக முடியுது.. வேத காலத்துல உருவான பாகுபாடு..
இன்னும் முழுசா மாறல.. முன்வேத காலத்துலதான் பாகுபாடு ஆரம்பிச்சுது... பின்வேதகாலத்துல ரொம்பக் கடுமையாயிடுச்சு..
அதெப்புடி முன், பின்னு பிரிச்சாங்க..
ரிக் வேத காலம்தான் முன்வேத காலம்.. பெண் குடும்பத்தின் தலைவி.. சடங்குகளை நடத்துனாரு.. குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுறது எல்லாம் இல்லை... விதவை மறுமணம் உண்டு... ஆனா சொத்துரிமை, பொது நிகழ்வுகள்ல பங்கேற்குறதுலாம் கிடையாது..
ஓ.. அப்புடினா, யஜூர், சாம, அதர்வண எல்லாம் பிற்கால வேதங்களா..?
சரியாச் சொன்ன.. அப்பதான் சடங்கு நடத்துறது, விதவை மறுமணம், கல்வி எல்லாம் மறுக்கப்பட்டது.. பலதார மணம் சர்வசாதாரணமா மாறுச்சு.
விதவை மறுமணம்னு சொன்னவுடனதான் ஞாபகம் வருது... ஜார்க்கண்டு மாநில அரசு புதுசா ஒரு அறிவிப்பு விட்டுருக்கு.. கணவனை இழந்த பெண் மறுமணம் செஞ்சுக்கிட்டா அவங்களுக்கு 2 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை தர்றாங்க.. நாட்டுலயே இதுதான் முதன்முறை.. 
மறுமணம் செய்யுற எல்லா விதவைகளுக்கும் உண்டா.?
இல்ல.. அரசு ஊழியர்.. ஓய்வூதியம் அல்லது வருமான வரி கட்டுறவர்.. இவங்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது..
எவ்வளவு முன்னேற்றம்... பின்வேத காலத்துல மறுக்கப்பட்ட மறுமணத்துக்கு சட்ட ஒப்புதல் வாங்க..
1856ல சட்டம் வந்ததா நான் படிச்சுருக்கேன், அங்கிள்..
ஆமா, சட்டத்துக்கான நகல் உருவானப்ப டல்ஹவுசியும், சட்டமாகுறப்ப கானிங்கும் அதிகாரத்துல இருந்தாங்க..
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்தான அங்கிள், இதுக்காகக் கடுமையாப் போராடுனாரு.. 
போராடுனது மட்டுமில்ல. முதல் மறுமணத்தையும் முன்னால நின்னு நடத்தி வெச்சாரு ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.. டிசம்பர் 7, 1856 அன்னிக்கு காளிமதி என்ற பெண்ணுக்கு மறுமணம் நடத்துனாரு.. அப்புறமா தன்னோட பையனையும் ஒரு விதவைக்குதான் திருமணம் செஞ்சி வெச்சுருக்காரு..
அய்யோ... அங்கிள்.. இப்பதான் ஞாபகம் வருது.. என் ஃபிரண்டுக்கு காலைல கல்யாணம்... இன்னிக்கு ரிசப்ஷன்... பை பை..