tamilnadu

4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

சென்னை, மே 17 - தமிழக அரசு சார்பில், ஆளுநருக்கு 18 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு மட்டும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த மார்ச் 14 முதல் ஏப்ரல் 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நிதி தொடர்பான 4 சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார். அனுப்பப்பட்ட 18 மசோதாக்களில் 14 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்துக்குள்ளும், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று  நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த ஏப்ரல் 8 அன்று தீர்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.