tamilnadu

img

காலை எழுவாய் கண்ணு - புலிகரம்பலூர் அ.பொன்னையன்

காலை வேளை நல்ல வேளை கண்ணு
        கண்வி   ழித்து வெளியில் பாரு நின்னு
சோலைக் குயிலோ பாட்டுப் பாடுது தானே
        தொடர்ந்து சேவல் கூவு  கின்றது தேனே!

காக்கைக் கூட்டம் காகா என்றே கரையுது
      கன்றை எண்ணிக் கறவைப் பசுவும் கனைக்குது
பூக்கள் வாசம் மலர்ந்தி ருப்பதைக் காட்டுது
      போபோ என்று வண்டுகள்  ஆட்டம் ஆடுது !

கிழக்கு வானில் முகில்கள் மெல்ல நகருது
      கிழித்து வானச் சூரியக் கதிர்கள் தெரியுது
வழக்க  மாக அம்மா சாணித் தெளிக்கிறார்
வாருக் கோலால் குப்பை கூட்டிப் பெருக்கிறார்

கோயில் மணியின் ஓசை கூடக் கேட்குது
      கூட்டி ஓசை பள்ளி எழுச்சி சேர்க்குது
தாவி நடப்போர் பேச்சோ மேலும் கூடுது
       தங்கும் மனத்தில் படித்தால் தூக்கம் ஓடுது

இந்த வேளை எழுந்தால் சோம்பல் பறக்கும்
        எண்ணும் எண்ணம் எல்லாம் அறிவாய்ப் பிறக்கும்
சிந்த னையில் செல்வம் வந்து சேரும்
        சிலிர்த்தெ ழுந்து கொள்வீர் இன்பம் கூடும்