மதுரை:
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தவிர்க்க சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இறைச்சிக்கடைகள் நடத்துவதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாட்டுதாவணியில் செயல்படும் தற்காலிக மீன் மொத்த விற்பனை நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீன் சில்லறை விற்பனையாளர்கள், பொதுமக்கள் சமூக விலகலை கைவிட்டு சனிக்கிழமை இரவு மீன்கள் வாங்கிச் சென்றனர்.
இறைச்சிக் கடைகளுக்கு தடை விதித்துள்ள மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை மாட்டுத்தாவணியில் உருவாக்கப்பட்ட மீன் விற்பனை நிலையங்களில் மீன்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. அங்கு வாங்கப்படும் மீன்கள் ஞாயிற்றுக்கிழமை மக்களிடம் விற்பனை செய்வதற்காக வியாபாரிகள் கொண்டு சென்றால் அதை பறிமுதல் செய்கின்றனர்.
மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகம் மொத்த மீன் வியாபாரத்தை முறைப்படுத்தவேண்டும். சமூக விலகலோ, முகக் கவசமோ இல்லையெனில் கொரோனா தொற்று பரவும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதை அதிகாரிகள் மட்டுமல்ல மக்களும் நினைவில் கொள்வது நல்லது.