tamilnadu

img

மலைவாழ் மக்கள் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றி

இருளர் மக்களுக்கு  இலவச வீட்டுமனை பட்டா திருவள்ளூர், பிப்.10- மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் போராட்டத்தால் பங்களாமேடு இருளர் இன மக்களுக்கு கணினி பட்டா வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், செருக்கனூர் ஊராட்சி பங்களாமேடு இருளர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 66 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என  கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகு 53 குடும்பங்களுக்கு  மூன்று தவணையாக குடிமனை பட்டா  வழங்கப்பட்டது. மேலும் கொடுத்த பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், விடுபட்ட 13 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தணியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் நாசரிடம் பங்களாமேடு கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்,  கொடுத்துள்ள பட்டாவை கணினியில்  பதிவேற்றம் செய்து  பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பங்களாமேடு இருளர் காலனியை சேர்ந்த 66 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி கோட்டாட்சியர்  தீபா தலைமையில் வெள்ளியன்று  (பிப். 7), நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாள ராக  திருத்தணி எம்எல்ஏ., சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதில் திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.