நியூயார்க்,டிச.30- அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் தனது 100 ஆவது வயதில் காலமானார். 1977 முதல் 1981 வரை இவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். 2002 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜியா மாகாணத்தில் இருந்த அவரது வீட்டில் சுமார் 22 மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் டிச.30 அன்று உயிரிழந்தார். அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள், சீனா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாட்டு தலைவர்கள் கார்ட்டருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜிம்மி கார்ட்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார். கார்ட்டர் கடந்த காலங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனினும் தற்போது உலக நாடுகள் சந்தித்து வருகிற மோசமான நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு வந்தவர்களுள் அவர் முதன்மையானவர். மேலும் தொழிற்சங்க வெறுப்பாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.