சென்னை, பிப்.8 - தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மற்றும் பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் சனிக்கிழமை தென்னக ரயில்வே மேலாளரை சந்தித்து மனு அளித்தனர். அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி இம்மனு அளிக்கப் பட்டுள்ளது. கடந்த பிப்.6 ஆம் தேதி கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் பயணித்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு, ஹேமராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலிலிருந்து தள்ளிவிட்டார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை பொது மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குற்ற வாளி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே துறை சார்பில் ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். ரயில்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கான அவசர உதவி எண்களை அறிவிக்க வேண்டும். காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பெண்கள் பெட்டிகளில் ரயில்வே காவல்துறையினரின் பாதுகாப்பு கட்டாய மாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் முன் வைக்கப்பட்டுள்ளன.