tamilnadu

img

காலத்தின் காலடிகளாய் - முகநூல் பதிவுகள்….

நட்பின் வாசல் 
 ‘கருப்பு கருணா’வின் முகநூல் நிலைத்தகவல் குறிப்புகள்
தொகுப்பு : சிராஜுதீன் 
வெளியீடு :பாரதி புத்தகாலயம்,  
தொடர்புக்கு : 044- 24332424 /24330024/24332934,  9498062424,  
விலை : ரூ. 384/ பக்கங்கள் :360/.

“நேற்று மதத்தின் பகைமையைக் காட்டி பாகிஸ்தான் அணியை வெறுக்கச் சொன்னீர்கள் … வெறுத்தோம். இன்று இனத்தைக் காட்டி இலங்கை அணியை வெறுக்கச் சொல்கிறீர்கள்…வெறுக்கிறோம். நாளை மொழியைக் காட்டி கர்நாடக அணியை வெறுக்கச் சொல்வீர்கள்…வெறுப்போம். அப்புறம் சாதியின் பெயரால் பக்கத்து தெருஅணியை வெறுக்கச் சொல்வீர்கள்… அதையும் வெறுப்போம். வெறுப்பின் விதைகளை ஊன்றிக்கொண்டே செல்லுங்கள்.உங்களுக்கு என்ன … கல்லாப் பெட்டி நிரம்பினால் போதும்.ஆனால் வெட்டிச் சாகப் போவது நாங்கதானே! வாழ்க வேற்றுமையில் ஒற்றுமை!” 07/04/2014இல் முகநூலில் கருப்பு கருணா பதிந்தது. இன்றும் படிக்கையில் நம்மோடு உயிரோடு பேசுவது போல் உள்ளதே. 

இதே போன்ற கருப்பு கருணாவில் நூற்றுக்கணக்கான பதிவுகளை – கடந்த பத்தாண்டில் எழுதியவற்றை ஒரே புத்தகத்தில் வாசிப்பது என்பது புதுமையான அனுபவமே. ”நட்பின் வாசல்…” அந்த அரிய வாய்ப்பை நம்முன் திறந்துவிட்டுள்ளது.  முகநூல் பதிவுகளை நூலாக்கும் முயற்சி அண்மையில் அதிகரித்துள்ளது.  ஆயின் ஒருவர் மறைவுக்கு பின் அவரது பதிவுகளைத் தொகுத்து உலவவிடும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும்.  கருப்பு கருணா ஒரு இடதுசாரி களச் செயல்பாட்டாளர், நாடகக் கலைஞர் அவரது வீரியமிக்க அரசியல் சமூகப் பார்வையை இந்நூல் முழுக்க தரிசிக்கலாம்.

அவன் யார்? சுருங்கச் சொல்லிவிட்டான். 17/10/2020இல் போட்ட பதிவை வாசியுங்கள் ; “நூற்றாண்டு கண்ட கம்யூனிச இயக்கத்தில் ஒரு உறுப்பினராக இருப்பது பெருமைக் குரிய ஒன்று. இதெல்லாம் சொன்னால் புரியாது.  வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.  நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.” 03/12/2019இல் ஓர் பதிவின் மூலம் “ ஒரு ஏழெட்டு வருசத்துக்கும் முன்னாடி….. கவின்மலர்தான் அரிச்சுவடி போட்டு கத்துக் கொடுத்தார்.  அதுதான் இப்போ இந்த அளவுக்கு வந்து நிக்குது.  அந்த வகையில் நம்ம குரு கவின்தான்…” என தன்னை முகநூலுக்கு அழைத்து வந்தவர் அவர்தான் என்கிறார்.   “ அரசன் அன்று கொல்வான் … தெய்வம் நின்று கொல்லும். . இதற்கு என்ன சார் அர்த்தம் ? ரெண்டு பயலுமே கொல்வாங்கன்னு அர்த்தம் … என்ன கொஞ்சம் முன்னபின்ன இருக்கும் …அம்புடுத்தான், ” [28/01/2017]

நூல் நெடுக அன்றாட அரசியல் சமூக நிகழ்வின் மீதான கறாரான எதிர்வினை மிக அழுத்தமாக பதிவாகி இருக்கிறது.  பெரும்பாலும் பதிவின் சாரமே செய்தியை உள்ளடக்கி இருக்கும். அந்த குறிப்பிட்ட நிகழ்வையும் சேர்த்து அசைபோட முடிந்தால் கூர்மை தைக்கும்.  “அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே கோயிலுக்கு செல்கிறேன்:எல்.முருகன். அதே அரசியல் சட்டம்தான் எல்லோரும் கோயில் கருவறைக்குள் போகலாம்னு சொல்லுது. .முடிஞ்சா ட்ரை பண்ணிப் பாருங்க முருகன்.” 06/11/2020இல் போட்ட இப்பதிவு நறுக்கென்று தலையில் குட்டும். சொல்லச் சொல்ல நீளும். இடம் கருதி நீட்டவில்லை. !

அட ! பழைய முகநூல் பதிவுகளை வாசிப்பதில் அப்படி என்ன சுவை இருக்கப் போகிறது என்கிறீர்களா ? வாசித்துத்தான் பாருங்களேன். முன்பெல்லாம் தினசரி நாட்குறிப்பு ’டைரி’ எழுதுகிற பழக்கம் பலரிடம் இருந்தது. இன்று டைரி எழுதும் பழக்கம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். முகநூல் டைரிக்கு மாற்றல்ல; அதற்கும் மேம்பட்டது; ஆயின் ரகசியம் கிடையாது. சொந்த புலம்பல்,  ஆரவாரம்,  எல்லாம் இருக்கும். ஆயின் அதுமட்டுமே அல்ல. அன்றாடம் ஏதேனும் ஒரு செய்தியை நல்லதோ கெட்டதோ சரியோ தவறோ நம்மை எழுத வைத்துவிடும். இது ஓர் சமூக ஊடகம். ஆகவே விரைவாய் ஓர் கருத்தை செய்தியைக் கொண்டு சேர்ப்பதில்,  எதிர்வினையாற்றுவதில் ஒரு முக்கியப் பங்கு ஆற்றுகிறது.  இன்று வாய்மொழி இலக்கியம் வரலாற்று ஆய்வில் ஓர் இடத்தைப் பெறத் துவங்கிவிட்டதைப்போல,   நாளை முகநூல் பதிவுகளும் ஆய்வுப் பொருள் ஆகுமோ ? யாமறியோம் !

இந்த நூலை நீங்கள் படியுங்கள்.  வரிசையாகப் படிக்கக்கூட வேண்டாம்.  அங்கும் இங்குமாய் அலைபாய்ந்தும் துணுக்குகளைக் கொறிப்பதுபோல் கொறிக்கலாம்.  இந்நூல் நமக்கு மூன்று செய்திகளை வலுவாகச் சொல்கிறது.  1] கவிதை மொழி,  சிறுகதை மொழி,  நாவல் மொழி,  கட்டுரை மொழி,  ஆய்வு மொழி என்று இருப்பதைப்போல் முகநூல் மொழி தனித்துவமானது என்பதை இந்நூல் சொல்லித் தரும். 2]கேலி,  கிண்டல்,  எள்ளல்,  ஏகடியம்,  நக்கல்,  நையாண்டி,  குத்தல்,  குதறல்,  விவரம்,   நுட்பம்,  விமர்சனம்,  வியாக்கியானம் என எல்லாம் கலந்து நம் அரசியலை பரந்த பகுதிக்கு கொண்டு செல்ல வழிகாட்டும் நூல்.  3] நம்மிடம் பெரும் எண்ணிக்கையிலான மத்தியதர வர்க்கம் உண்டே.  அவர்களிடம் நவீன வசதிகள் உண்டே. அவர்கள் முகநூலை கண்டு கொள்ளாமல் இருப்பது சரியா ? எல்லோரும் நம் கருத்துகளை அவரவர் கற்பனை கைத்திறன் கலந்து அளித்தால்,   வரும் பதிவுகளை ஆதரித்தால் நம் பரப்புரை வலுவாகுமே! இந்நூல் அதற்கு தூண்டுகோல் ஆவதாக ! தொகுத்தளித்த சிராஜுதீனுக்கு வாழ்த்துகள்!

- சுபொஅ.