tamilnadu

img

குடமுருட்டி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

குடமுருட்டி ஆற்றை தூர்வார நடவடிக்கை  எடுக்க விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம், மே 22-  மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், காவிரியின் கிளை ஆறுகள் பெயரளவில் கூட தூர் வாரப்படவில்லை. அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றில், நாணல்கள் மண்டி நீரின் போக்கைத் தடுக்கின்றன. நீரின் வழித்தடம் வாய்க்காலாக சுருங்கி விட்டது, எனவே, அரசு விரைந்து குடமுருட்டி ஆற்றை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அவர்கள் மேலும் கூறுகையில், மேல வழுத்துாரில் குடமுருட்டி ஆற்றிலும் நெய்வேலி காட்டா மணக்குகள் மண்டியுள்ளன. சரபோஜி ராஜபுரத்தில் குடமுருட்டி ஆறு தலைப்பிலிருந்து பிரியும், சரபோஜி ராஜபுரம் வாய்க்காலால் ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறும். இந்த வாய்க்கால் தூர் வாரப்பட வில்லை. ஆனால் கீழ் பகுதியான ரெகுநாதபுரம், பண்டாரவாடையில் பாயும் வாய்க்கால் தூர் வாரப்பட்டுள்ளது. சரபோஜி ராஜபுரத்தில் உள்ள குடமுருட்டி ஆற்றில் உள்ள தடுப்பணை உடைந்தும் பல வருடங்களாக சரி செய்யப்படவில்லை.  விவசாயிகள் பல முறை மனு கொடுத்தும் கவனிக்கப்படவில்லை. அரசு  விவசாயிகள் நலனை கருதி இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.