tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மார்ச் 28 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் '

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மார்ச் 28 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி அளவையர் உயிரிழப்பு

கீழே கிடந்த மின் கம்பியை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த க.நாகராஜன் (76), அரசுத் துறையில் நில அளவையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற மின் மோட்டார் சுவிட்சை போடுவதற்காகச் சென்று கொண்டிருந்த அவர், வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துவிட்டார். உடனே அவர், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.  இதனால் பலத்த காயமடைந்த நாகராஜன், தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடல் அட்டைகளை வைத்திருந்தவர் கைது

பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக் குழுமம் காவல் துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில், ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர்கள் கோபால், கார்த்திக் ஆகியோர், மல்லிப்பட்டினம் துறைமுகப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வைத்திருந்த வெள்ளை நிற கேனை சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை 25 கடல் அட்டைகளை பிடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடல் அட்டைகளை வைத்திருந்த சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரையும், அவர் வைத்திருந்த கடல் அட்டைகளையும், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனர்.