வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நாற்று நடவு செய்முறை விளக்கம்
தஞ்சாவூர், மே.1- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம், துவரங்குறிச்சி கிராமத்தில் புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளின் வயலில் நாற்று நடவு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், திருந்திய நெல் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடியின் தொழில்நுட்பம் பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கபட்டதாகும். இதில், நெல் நாற்றுக்கள் பாய் நாற்றங்கால் முறையில் வளர்க்கப்படும். விதை விதைத்த 18 நாளில் நடவுசெய்ய வேண்டும். ஒரு குத்தில் ஒரு நாற்று மட்டும் நடவு செய்ய வேண்டும். பயிர்களுக்கு மற்றும் வரிசைகளுக்கு இடையில் 25 செ. மீ. இடைவெளி விட வேண்டும். பயிர்களுக்கு இடையில் கோனாவீடர் களை எடுப்பான் கருவி மூலம் களை எடுக்க வேண்டும். வயலில் நீர் மறைய, நீர் கட்ட வேண்டும். திருந்திய நெல் சாகுபடியின் மூலம் குறைந்த விதையளவே தேவைப்படுகிறது. பாரம்பரிய நெல் சாகுபடியை விட 1.5 மடங்கு மகசூல் அதிகரிக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும். வருமானம் அதிகரிக்கும். திருந்திய நெல் சாகுபடியை மேற்கொள்வதன் மூலம், விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம், செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நெல் சாகுபடியை மேற்கொள்ளலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.