புதுச்சேரி,மே 6- சூடானில் சிக்கித் தவித்து வரும் புதுவை மாநிலத்தை சேர்ந்த வர்களையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார். இதனடிப்படையில் புதுச்சேரி வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் முருகன்(38) சூடானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டார். புதுச்சேரிக்கு பத்திரமாக திரும்பிய முருகன் சனிக்கிழமை (மே 6) முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை மாவட்ட துணை ஆட்சியர் சவுந்தரி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் முருகன் கூறுகையில், நான் 10 ஆண்டுக்கு மேலாக சூடானில் பணியாற்றி வந்தேன். குடும்பத்துடன் வசித்து வந்தேன்.குழந்தைகளின் படிப்புக்காக நாடு திரும்பினேன். 8 மாதம் முன்பு நான் மட்டும் சூடான் சென்றேன். அங்கு ரபக் என்ற நகரில் சர்க்கரை ஆலையில் பொறியாளராக பணியாற்றி வந்தேன். உள்நாட்டு போரில் சிக்கியிருந்த என்னை இந்திய அரசு மீட்டது. எனக்கு முன்பாக புதுவை ஏம்பலத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் கொச்சின் வழியாக புதுவைக்கு வந்து சேர்ந்தார் என்றார்.