அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக-வால் வீழ்த்தப்பட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலை அதிமுக-பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாக எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், அமித் ஷாவுடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் பாஜக சார்பில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக-வால் வீழ்த்தப்பட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"வென்றவர் நீண்ட நேரம் பேசினார். வீழ்ந்தவருக்கு பேச்சுரிமை இல்லை. எனவே அமைதியாக இருந்தார். எடப்பாடியைப் போல தமிழ்நாடு வீழாது. அதுவும் இவர்களிடம் வீழவே வீழாது.
அனைவரின் பேச்சுரிமைக்காகவும், நம் மாநிலத்தின் உரிமைக்காகவும், இந்திய மாநிலங்களின் உரிமைக்காகவும் தமிழ்நாடு போராடும். வெல்லும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.