tamilnadu

img

குடமுருட்டி வாய்க்காலில் தூர்வாரும் பணி தொடக்கம்

குடமுருட்டி வாய்க்காலில் தூர்வாரும் பணி தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்புகள் மற்றும் பாசன ஆதாரங்களை 1071 பணிகளாக 6170,60 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.120,00 கோடி மதிப்பீட்டில் தூர்வார தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வார மொத்தம் 115 பணிகள் 343.14 கிமீ தொலைவிற்கு ரூ.16.70 கோடி மதிப்பீட்டில் தூர்வார எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 1,18,258 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி மேம்படுத்தப்படும்.  இப்பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டத்திற்குட்பட்ட குழுமாயி அம்மன் கோயில் அருகில் குடமுருட்டி வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணியினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த குடமுருட்டி வடிகால் வாய்க்காலானது 6.10 கிமீ நீளமாகும். இவ்வடிகாலானது குழுமாயி அம்மன் கோவிலில் ஆரம்பமாகி கரூர் பைபாஸ் பாலம் அருகே, காவிரி ஆற்றில் கலக்கிறது. திருச்சிராப்பள்ளி மாநகர பகுதியின் முக்கிய வடிகாலாக இக்குடமுருட்டி வடிகால் திகழ்கிறது. வெள்ளம் வரும் காலங்களில் மாநகரப் பகுதியில் பெய்யும் வெள்ளநீரையும், உய்யகொண்டான் பாசனர் பகுதிகளிலிருந்து வடியும் உபரிநீரையும் காவிரி ஆற்றில் கடத்துகிறது. இவ்வாய்க்கால் துர்வாரப்படுவதால் உய்யகொண்டான் பாசன நிலங்கள் மேம்படுவதுடன், திருச்சிராப்பள்ளி மாநகரப் பகுதியும் வெள்ள நீர் பாதிப்பிலிருத்து பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியளார் சிவக்குமார், செயற்பொறியாளர் நித்யாநந்தம், உதவி செயற்பொறியாளர் தினேஷ்கண்ணன். வேளாண்மை துறை இணை இயக்குநர் வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.